Wednesday, September 28, 2005

பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாடு

பதிப்பாளரின் உரிமைகளைக் காக்கும்
பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாடு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

வெட்கமும் வேதனையும் தருகின்ற சூழ்நிலையில், பதிப்பாளரும் விற்பனையாளரும் நம்பகத்தன்மையின் விளிம்பில் நிற்கின்றனர்.
காசைக் கொடு, பொருளை எடு என்ற கொள்கை 500 தலைப்புகளுக்கு அதிகமாக வெளியிடும் பெரும் பதிப்பாளரிடம் உண்டு. விற்காவிட்டாலும் பரவாயில்லை, கடனுக்குக் கொடுக்க மாட்டோம்; கடனுக்குக் கொடுத்துவிட்டு, தொகைக்காக அலைவதில் ஆகும் செலவு சொல்லொணாதது; இருப்பதைக் காப்போம்; என்கின்றனர் அவர்கள்.
75 - 500 தலைப்புகளை வெளியிடும் நடுத்தரப் பதிப்பாளர் பலருக்குக் கடன் கொடுக்க விருப்பம்; ஆனால் தொகை வந்து சேருமோ என்ற கவலை. இருப்பைத் தம்மிடம் வைத்திருப்பதைவிட விற்பனையாளரிடம் கொடுத்து வைத்தால் விற்பனையாகும் என்ற நியாயமான நப்பாசையுடன், ஓடுமீன் ஓடி உறுமீன் ஆகும் நம்பகத் தன்மையுள்ள விற்பனையாளரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
15 - 75 தலைப்புகளை வெளியிடும் சிறு பதிப்பாளர் பலருக்குக் கடன் கொடுத்து விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. விற்பனையாளரைத் தேடும் இவர்கள், இருப்பில் தேங்கியுள்ள நூல்களைப் பார்த்து எரிச்சலடைகின்றனர்.
1 -15 தலைப்புகளை வெளியிடும் மிகச் சிறு பதிப்பாளர், கழிவை அதிகமாகக் கொடுத்தும் கடனுக்குக் கொடுத்தும் தம் நூல்களை விற்பனையாளர் அடுக்குகளில் காட்சிக்கு வைக்க விரும்புகின்றனர்.
தோராய மதிப்பீடாக, 15 அரசுசார் நிறுவனப் பதிப்பாளர், 25 பெரும் பதிப்பாளர், 75 நடுத்தரப் பதிப்பாளர், 200 சிறு பதிப்பாளர், 1300 மிகச் சிறு பதிப்பாளர் - தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் உள்ளனர் எனலாம்.
தோராய மதிப்பீடாக, இவர்கள் அனைவருமாக இணைந்து சமகாலத்தில் 30,000 - 40,000 தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்; ஆண்டொன்றிற்கு 3,000 புதிய தலைப்புகளை வெளியிடுகின்றனர். 1,500 பழையதலைப்புகளை மீள்பதிப்பிக்கின்றனர்.
இவர்களுள், சிறு பதிப்பாளரும், மிகச் சிறு பதிப்பாளருமாக உள்ளோர், பதிப்புத் தொழிலை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்துவோரல்லர். பதிப்புத் தொழிலுக்குள் புகும் அதே வேகத்தில் காலப்போக்கில் அதைவிட்டு வெளியேறியும் விடுகின்றனர். வெளியேறுவோர் இடங்களைப் புதிதாக நுழைவோர் நிரப்புகின்றனர்.
இப் பதிப்பாளர் தேடும் விற்பனையாளர் எங்குளர்? தமிழகத்தில், புதுச்சேரியில், இலங்கையில், மலேசியாவில், சிங்கப்பூரில், ஐரோப்பிய - வட அமெரிக்க நாடுகளில், ஆஸ்திரேலியாவில் எனத் தமிழ் நூல்களின் விற்பனையை முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் இருக்கின்றனர். பெரும் பதிப்பாளரின் வெளியீடுகளில் தோராயமாக 30% நூல்கள் தமிழகத்துக்கு அப்பால், வெளிநாடுகளில் விற்பனையாகின்றன.
தமிழ்கூறும் நல்லுலகில் நம்பகத்தன்மையுள்ள விற்பனையாளர் யார்? இந்த வினாவுக்கு விடை காண முடியாத தவத்திரு ஆறுமுக நாவலர், சென்னை, சிதம்பரம், யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் பதிப்பகமும் விற்பனை நிலையமும் தொடங்கினார். தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலைத் தொடக்கியவர் அவரே. 145 ஆண்டுகளாக அந்த விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
தாமரைத்திரு. சுப்பையா, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கிளைகளைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிறுவினார்.
நியுசெஞ்சுரி புத்தக நிலையத்தினர் தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலைத் தமிழகமெங்கும் விரித்துப் பெருக்கினர்.
லிப்கோ நிறுவனம் சட்டபூர்வ முகவர்களைத் தமிழ் நாடெங்கும் நியமித்து, தம் வெளியீடுகள் தமிழ் மக்களைச் சென்றடையுமாறு பார்த்துக் கொள்கிறது.
பழநியப்பா பிரதர்ஸ், மணிவாசகர் பதிப்பகம் ஆகியோரின் விற்பனை நிலையங்களில் பாடநூல் மற்றும் துணை நூல்களைத் தமிழகமெங்கும் விற்பனை செய்வதுடன் தமிழ்நூல்களும் விற்பனையாகின்றன.
கண்ணதாசன் பதிப்பகமும் மொத்த விற்பனைக் கிளைகளை உருவாக்கி வருகிறது.
காவ்யா பதிப்பகத்தார் பங்களூரிலும் சென்னையிலும் தம் வெளியீடுகளை விற்கின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், புதுச்சேரி, விழுப்புரம், தேவகோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், பழநி, தேனி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற பல இடங்களில் தனித்தனி விற்பனையாளர் பலர் உளர்.
இவர்களைத் தவிர, புத்தக விற்பனையில் ஆர்வமுள்ள பலர் சிறு விற்பனையாளராகத் தமிழகத்தின் பல ஊர்களில் தோன்றுவதும் மறைவதுமாக உளர்.
இந்தப் பின்னணியில், தமிழகமெங்கும் 25 வணிக உரிமதாரர்களைக் காந்தளகம் நியமித்து, தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலை நம்பகத்தன்மையுள்ளதாக மாற்ற முயன்று வருகிறது.
இத்தகைய விற்பனையாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையேயான தொடர்புகள் நம்பகத்தன்மை உடையதாக இல்லாததால், தமிழ்நூல் விற்பனைக்கு உரிய இலக்குகள் தெளிவாகத் தெரி வதில்லை.
எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே பதிப்பாளரும் விற்பனையாளரும் நூலகங்களும் பாலங்களாக இருக்கின்றன. இதனால் பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே சட்டபூர்வ நம்பகத்தன்மை என்ற பாலம் தேவையாக உள்ளது.
இன்றைய நிலையில், 20 ரூபாய் முத்திரைத் தாளில் பதிப்பாள ரும் விற் பனையாளரும் சட்டபூர்வ உடன்பாட்டைச் செய்து கொள்வதால், பதிப்பாளரின் சொத்துக்கு விற்பனையாளர் சட்டபூர்வப் பாதுகாப்பாளராகுவர்.
மாதிரிக்காக, சிங்கப்பூர்ப் பதிப்பகத்தாருடன் பூநகர்க் காந்தளகம் என்கின்ற விற்பனையாளர் செய்து கொண்டதான உடன்பாட்டு வரிகளைக் கீழே தந்துள்ளேன். நொத்தாரிசு ஒருவர்முன் இந்த உடன்பாட்டில் ஒப்பமிட்டால் உடன்பாட்டு விதிகள் சட்டவலுவைப் பெற்றுவிடுகின்றன.
பதிப்பாளர் விற்பனையாளர் பயன்பெறுவார்களாக.
உடன்பாடு / ஒப்பந்தம்
சென்னை, கார்வண்ணப்பேட்டை (அஞ்சல்குறி: 600000), திருநகர்ச் சாலை, 15ஆம் எண்ணில் உள்ள சிங்கப்பூர்ப் பதிப்பக உரிமையாளர் சிற்றம்பலம் மகன் முருகன் முதற்பகுதியாராகவும்
தென்னன்குடி மாவட்டம், பூநகர் (அஞ்சல்குறி: 688888), ஆற்றுச் சாலை, 25ஆம் எண் பூநகர்க் காந்தளக வணிக உரிமதாரர் பறம்புமலையான் மகன் பாரி இரண்டாம் பகுதியாரகாவும் செய்து கொள்ளும்
உடன்பாடு / ஒப்பந்தமாவது:
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் ஆர்வத்தினால், தரம் வாய்ந்த தமிழ்நூல்களைப் பதிப்பிப்பதைத் தொழிலாகக் கொண்ட முதற்பகுதியார், தமிழகத்திலும் புதுச்சேரியிலும், பிற மாநிலங்களிலும் தம் வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பியதாலும்,
தரமான நல்ல நூல்களை மக்களுக்கு விற்பனைசெய்து, அறிவுப் பரம்பலைப் பெருக்கும் அதே நோக்கம் கொண்ட இரண்டாம் பகுதியார், முதற்பகுதியாரின் விற்பனை ஆர்வத்தை அறிந்துகொண்டு, முதற்பகுதியாரின் வெளியீடுகளைத் தென்னன்குடி மாவட்டம், பூநகர்ப் பகுதியில் வாழும் மக்களுக்கு விற்பனை செய்ய விரும்பி, முதற் பகுதியாருக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்ததாலும்,
இரண்டாம் பகுதியாரின் விருப்பத்தை ஏற்று, அவருக்குத் தன் பதிப்பு மற்றும் வெளியீடுகளைத் தென்னன்குடி மாவட்டம், பூநகர்ப் பகுதியில் வாழும் மக்களிடம் விற்பனை செய்வதற்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுவதாலும்,
மேற்கண்ட இரு பகுதியாரும் கீழ்க்காணும் விதிகளுக்கமையச் செயற்பட உடன்படுகின்றனர்.
விதிகளாவன:
1. தாம் பதிப்பித்து வெளியிடும் நூல்களின் விவரப் பட்டியலை அவ்வப்போது இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
2. மேற்காணும் நூல்விவரப் பட்டியலில் உள்ள தலைப்புகளில், தனது பகுதியில் விற்பனையாகக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்து, அவற்றில் ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்துக்கு மேற்படா எண்ணிக்கையில் நூல்களை அனுப்புமாறு முதற் பகுதியாரை எழுத்தில் கோர இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
3. இரண்டாம் பகுதியார் கோரும் தலைப்புகளை, அத்தலைப்புகளின் இருப்பு நிலையைக் கருத்தில்கொண்டு, அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
4. நூலின் விலையில் 40%ஐ விற்பனைக் கழிவாக இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற் பகுதியார் உடன்படுகிறார்.
5. வரிசை, நூலின் பெயர், ஒன்றன் விலை, எண்ணிக்கை, மொத்த விலை, கூட்டுத் தொகை, 40% கழிவு போக எஞ்சிய தொகை ஆகியன கொண்ட விற்பனைப் பட்டியலை முதற் பகுதியார் தயாரித்து, அதில் இரு படிகளை இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
6. விற்பனைப் பட்டியலில் உள்ள நூல்களை, தரமான, பாதுகாப்பான அட்டையில் சேதாரம் ஏற்படாப் பொதியாக்கி, தன் செலவிலேயே அப்பொதியை இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
7. பொதியைப் பெறுவதில் உள்ள உள்ளூர்ச் செலவுகளை ஏற்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
8. பொதியைப் பெறச்செல்லும் இரண்டாம் பகுதியார், புறச் சேதாரங்கள் பொதியில் இருப்பின், முதற்பகுதியாரின் கவனத்திற்குக் கொணர்ந்து, பொதியைப் பெறாது திருப்பி அனுப்பவோ, அல்லது, முதற்பகுதியாரின் எழுத்துவழி ஆணைக்கமைய ஒத்துழைக்கவோ இரண்டாம் பகுதியார் உடன்படு கிறார்.
9. புறச் சேதார மற்ற பொதி யாயின் உள்ளூர்ப் பொதியகற்றும் செலவுகளைக் கொடுத்து, தம்மிடம் எடுத்துவந்து, பொதியில் உள்ளனவும் முதற்பகுதியார் அனுப்பிய விற்பனைப் பட்டியலும் ஒத்திருக்கின்றதா என ஒப்புநோக்கி, உள்ள நிலையையும் உட் சேதாரம் இருப்பின் அதையும் சேர்த்து இரண்டாம் பகுதியார் எழுதி, முதற்பகுதியார் அனுப்பிய விற்பனைப் பட்டியலின் இரண்டாம் படியில் ஒப்பமிட்டு, ஒருவாரத்துள் முதற்பகுதியாருக்கு ஒப்பமிட்ட படியை அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
10. முதற் பகுதியாரின் புத்தகங்கள் இரண்டாம் பகுதியாரிடம் இருந்தாலும் அவை முதற்பகுதியாரின் சொத்து என்பதால், எந்நேரமும் முதற் பகுதியார் அவ்விருப்பைச் சோதிக்க விரும்பி இரண்டாம் பகுதியாரிடம் நேரடியாக வந்தோ, தன் சார்பாளரை எழுத்துமூலமாகச் சாட்டிப் பூநகருக்கு அனுப்பியோ கேட்டால், அவற்றின் இருப்பு நிலையை முதற் பகுதியாருக்குக் காட்ட இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
11. தென்னன்குடி மாவட்டம், பூநகரில் முதற் பகுதியாரின் வெளியீடுகளை விரைந்து விற்பதற்குரிய, விளம்பரம் உள்ளிட்ட அனைத்துச் சந்தைப்படுத்தல் உத்திகளையும் கையாள இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
12. முதற் பகுதியார் அனுப்பிய தலைப்பு ஒன்றின் அனைத்துப் படிகளும் விற்ற நிலையில், இரண்டாம் பகுதியார் கேட்கும் படிகளை, இருப்பு நிலை நோக்கி, உடனுக்குடன் அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
13. தமிழ்த் திங்கள் முதலாம் நாளுக்குச் சமமான ஆங்கிலத் திங்கள் பதினைந்தாம் நாளை ஒட்டி, ஒவ்வொரு திங்களும் முதற் பகுதியாரின் விற்பனைப் பட்டியலில் உள்ள தொடக்க இருப்பு நிலையையும், அப்பட்டியலில் உள்ள அடுத்த நீள் கட்டத்தில் அத்திங்களில் விற்ற எண்ணிக்கை நீக்கிய இருப்பையும், இருப்பின் விலைத் தொகையயும் தொடர்ச்சியாக எழுதி, கூட்டுத் தொகை இட்டு, 40%ஐக் கழித்த தொகையையும் இரண்டாம் பகுதியார் எழுதி, ஆங்கிலத் திங்கள் இருபதாம் நாளுக்கு முன்னர் முதற் பகுதியாருக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
14. மேற்படி பதின்மூன்றாம் விதியிலுள்ளவாறு திங்கள்தோறும் பட்டியலை அனுப்பும் பொழுது, அத்திங்களில் விற்ற தொகையைக் கழிவு நீக்கி, முதற் பகுதியாருக்கு, பணவிடை / வங்கி வரைவோலையாக ஒவ்வொரு ஆங்கிலத் திங்கள் இருபதாம் நாளுக்கு முன் அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
15. மேற்படி பதின்மூன்றாம் பதினான்காம் விதிகளைத் தனித்தனியாகவோ கூட்டாகவோ இரண்டாம் பகுதியார் ஒழுங்காககக் கடைப்பிடிக்காத பட்சத்தில், ஒரு திங்கள் தவணையில் தனது இருப்பு அனைத்தையும் விற்ற தொகையையும் தனக்கு அனுப்புமாறு முதற் பகுதியார் இரண்டாம் பகுதியாரைக் கோரினால், அதற்கமைய இரண்டாம் பகுதியார் முதற் பகுதியாரின் புத்தகங்கள் அனைத்தையும் சேதாரமற்றதாகக் கிடைக்கும் வகையில் பொதியாகக் கட்டித் தனது செலவிலேயே முதற் பகுதியாருக்கு அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
16. மேற்படி ஒன்பதாம், பத்தாம், பதின்மூன்றாம் பதினான்காம் பதினைந்தாம் விதிகளைத் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இரண்டாம் பகுதியார் கடைப்பிடிக்காத பட்சத்தில், கடைப்பிக்காத நாளில் இருந்து ஒரு திங்களின் பின்னர் வரும் முதல் திங்களுக்கு, ஒரு தலைப்புக்கு ரூ. 100 வீதமும், இரண்டாவது திங்களில் ஒரு தலைப்புக்கு ரூ. 200 வீதமும், மூன்றாவது திங்களில் ஒரு தலைப்புக்கு ரூ. 300 வீதமும் தண்டத் தொகையாக முதற் பகுதியாருக்குக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார். மூன்று திங்களுள்ளும் இரு பகுதியாரும் கணக்கைத் தீர்க்காத நிலையில், முதற் பகுதியாருக்கு ஏற்படும் வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றச் செலவுகளைக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
இவ்வுடன்பாடும் ஒப்பந்தமும் இருபகுதியாராலும் ஏற்படும் நோக்கம் உலகெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்குவதும் அதன் மூலம் கல்வியும் அறிவும் பெருகுவதுமேயாகும் என இரு பகுதியாரும் உடன்படுகின்றனர். எனவே இவ்வுடன்பாட்டுக் காலத்தில், தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கப் போதுமான முயற்சிகளை இரண்டாம் பகுதியார் செய்து வருகிறார் என்பதற்கான சான்றுகளை முதலாம் பகுதியாருக்குத் திங்கள்தோறும் இரண்டாம் பகுதியார் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.
இவ்வுடன்பாடு / ஒப்பந்தத்தை மீறி இரண்டாம் பகுதியார் நடந்து கொள்வதால் / கொண்டதால் முதற் பகுதியாருக்கு ஏற்படும் இழப்புகளையும் செலவுகளையும் விரயங்களையும் முதற் பகுதியாருக் குக் கொ டுக்க இரண் டாம் பகுதியார் உடன்படு கிறார்.
இவ் வணிக உரிமமும் அது தொடர்பானதுமான வழக்குகள் சென்னை (அல்லது பதிப்பாளரின் ஊரின்) மாநகர நீதிமன்ற வரையறைகளுக்குள் மட்டுமே பொருந்தும்.
மேற்காணும் பந்திகளில் கூறியவற்றை நன்றாக வாசித்துப் புரிந்து கொண்டபின் இன்று திருவள்ளுவராண்டு 2036 வைகாசி 18ஆம் நாள் புதன்கிழமை (01.04.2005), சென்னையில் முதற் பகுதியாரும் பின்னர் பூநகரில் இரண்டாம் பகுதியாரும் மனமொப்பி இவ்வுடன்பாட்டின் இருபடிகளில் நொத்தாரிசுகள் முன்னிலையில் கையொப்பமிட்டு ஒப்பந்தப் படிகளைப் பரிமாறிக் கொள்கிறோம்.
முதற்பகுதியார் இரண்டாம் பகுதியார்
சாட்சிகள் சாட்சிகள்

1 Comments:

Blogger முனைவர் ஆ. மணி said...

பதிப்புத் தொழிலை நம்பிக்கைக்குரியதாக்கும் தங்கள் முயற்சி தழைக்க வாழ்த்துக்கள்.நன்றி

7:08 PM  

Post a Comment

<< Home