Wednesday, September 28, 2005

வாசகரைத் தேடி வரும் தமிழ்நூல் பதிப்பாளர்

சமைப்பதற்கு மண்சட்டியே போதும் என்ற காலம் மாறிவிட்டது. அமெரிக்காவிலிருந்து வரும் உலோகச்சட்டியில் சமைக்கும் காலம் வந்துவிட்டது. அமெரிக்கச் சட்டி ஒன்றின் விலை 12,000 ரூபாய். இந்தச் சட்டியை வீடுவீடாகக் கொண்டுச் சென்று விற்பனை செய்கிறார்கள். இருபத்தைந்து ரூபாய் பெறுமதியான மண் சட்டியில் சமைத்தவர்கள் பன்னீராயிரம் ரூபாய் பெறுமதியான அமெரிக்க உலோகச் சட்டியில் சமைக்கத் தொடங்கியுள்ளனர்.நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. மண்சட்டிகள் சந்தைக்குத்தான் வரும். பல் அடுக்குச் சந்தைப்படுத்தல் பணியில் தமிழ்நாட்டில் பணிபுரியும் இலட்சக்கணக்கானோர் அமெரிக்க உலோகச் சட்டிகளை வீட்டுள் கொணர்ந்து விற்கின்றனர். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உற்பத்தியாகி, அங்கு விற்பனை ஆகாமல் தேங்கியுள்ள ஏராளமான நுகர்ச்சிப் பொருள்களைப் பல் அடுக்குச் சந்தையாளர் நுகர்வோர் வீட்டுக்குள் எடுத்துச் செல்கின்றனர். சமைத்துக் காட்டி விற்பனை செய்கின்றனர்.உற்பத்தியான பொருளைக் காட்சிக் கூடத்தில் விற்பனை செய்த காலம் மலையேறிவிட்டது. சந்தைப்படுத்தல் தனிக்கலையாக வளர்கிறது. உலக மயமாக்கல் என்ற போர்வையில் ஐரோப்பிய, அமெரிக்க நுகர்ச்சிப் பொருள்கள் தமிழர்களின் வீடுகளுள் புகுந்துள்ளன.உலகமயமாக்கல் அமெரிக்க உற்பத்திகளைத் தமிழ் நாட்டுக்குள் நுழைக்கின்றன. ஆனால் தமிழ் மொழியில் வெளியாகும் நூல்கள் பல தமிழகமயமாக்கப் படாமலே இருக்கின்றன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான தமிழ் நூல்கள் தமிழ்ப் பதிப்பாளரிடம் தேங்கியுள.இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புத்தகங்களை விற்பதற்கான புது முயற்சிகள் பற்றி, 25 விற்பனையாளரின் வலைப்பின்னல் கொண்ட காந்தளகம் பதிப்பக உரிமையாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தனிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:எழுத்தறிவும், படிப்பறிவும், புலமையும் பெற்ற தமிழரின் எண்ணிக்கை மலை போல் உயர்ந்தாலும் தமிழ் நூல்கள் அவர்களை அவர்களைச் சென்றடைவதே இல்லை.தமிழ் வாசகர்களைத் தேடி அவர்கள் இருக்குமிடத்திற்கே தமிழ் நூல்களைக் கொண்டு சென்று காட்சியில் வைத்து விற்பனைச் செய்த முன்னோடி நிறுவனம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஒன்றுதான்.அதற்கு முன் வீடுவீடாகப் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்கும் பழக்கத்தையும், தமிழ்ப் புத்தக அடுக்கு வீட்டில் வைத்திருக்கும் பழக்கத்தையும் புழங்கவிட்டவர் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத் தாமரைச் செல்வர் சுப்பையா.கால ஓட்டத்தில் தமிழ்ப் பதிப்பகங்கள் தமிழக அரசின் நூலக இயக்கத்தை மட்டும் நம்பியே நூல்களை பதிப்பிக்கத் தொடங்கின. இதனால் வாசகருக்கும் பதிப்பகத்தாருக்கும் இருந்த இடைவெளி விரிந்தது. புத்தகக் காட்சிகள் சென்னையிலும் தொடர்ந்து பிற நகரங்களிலும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு காட்சியைப் பற்றிக் கேள்விப்படும் புத்தக ஆர்வலர் அக்காட்சிக்குப் போகவேண்டுமே, புத்தகங்களைப் பார்க்க வேண்டுமே என்ற ஆர்வத்தால் துடிப்பர். அவரிடத்திலிருந்து காட்சி நடக்கும் தூரம் நெடுந்தொலைவு. அதனால் புத்தக ஆர்வலர் பலர் காட்சிகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளனர்.தமிழ்நாட்டில் மூலைமுடுக்குகளிலெல்லாம் புத்தகக்காட்சியை நடத்தி விடவேண்டுமென்ற எண்ணம் அண்மைக் காலங்களாக சில தமிழ் பதிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சென்று தமிழ் நூலைப் பரப்ப வேண்டும் என்று நினைக்கும் தமிழ் பதிப்பாளரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அரபு நாடுகளிலும், மொரீசியசு, மலைஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் ஊரூராகச் சென்று புத்தகக் காட்சி நடத்தி வருபவர் மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன். தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் இவர் புத்தகக் காட்சிகளை நடத்தி வருகிறார்.கலைஞன் பதிப்பகத்தார் மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் சென்று பல ஊர்களில் புத்தகக் காட்சிகளை நடத்தினர்.கண்ணதாசன் பதிப்பகத்தாரும் கொழும்பில் புத்தகக்காட்சியை நடத்தினர். தமிழ்நாட்டின் ஊர்களிலும் நடத்தினர்.கோவை விஜயா பதிப்பகத்தாரின் புத்தக விற்பனை முயற்சிகள் புதுமையானவை. கொங்கு நாட்டில் ஊர்கள் தோறும் தமிழ்நூல்களை விற்பனை செய்வதில் விஜயா பதிப்பகம் சிறந்த முயற்சிகளை மேற்கொள்கிறது.தமிழ்நாட்டில் தமிழ்நூல் விற்பனையாளரின் மிகப் பெரிய வலைப்பின்னலைக் கொண்ட ஒரே நிறுவனம் காந்தளகம். ஏறத்தாழ 25 விற்பனையாளர்களை உருவாக்கி, ஆதரவு கொடுத்து வளர்த்து வருகிறது. இந்த விற்பனையாளர் தங்கள் காலிலேயே புத்தக விற்பனைத் தொழிலை நம்பி வாழவேண்டுமென்ற இலக்கோடு முயற்சிக்கிறார்கள். இவர்களுள் பலர் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.காந்தளகம் இதுவரை மூன்று பயிற்சி வகுப்புகளைத் தமிழ் நூல் விற்பனையாளர்களுக்காக நடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மூத்த பதிப்பாளர்களை இவ்விற்பனையாளர் வலைப்பின்னல் ஈர்க்கிறது. வாசகர்களுக்கு அனைத்துப் பதிப்பகங்களின் தமிழ் நூல்களும் கிடைக்க வேண்டுமென்பதில் காந்தளகம் முனைப்பாக உள்ளது.காந்தளகத்தின் இந்த விற்பனை வலைப்பின்னலைப் பயன்படுத்த கலைஞன்/அநுராகம் பதிப்பகத்தார் விரும்பினர். காந்தளகத்தின் விற்பனையாளர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்தனர். சமகாலத்தில் 25 நகரங்களில் கலைஞன்/அநுராகம் பதிப்பகத்தின் நூல்களைக் காட்சியில் வைத்து விற்கும் திட்டத்தை கலைஞன்/அநுராகம் நந்தா காந்தளக விற்பனையாளருக்கு விளக்கினார். சிறிய அளவில் புத்தகக்காட்சியை நடத்துவதைப் பற்றி நான் விளக்கினேன்.ஒவ்வோர் இடத்திலும், ஒவ்வொரு சூழலிலும் ஏற்படும் சிக்கல்களை எடுத்து நோக்கினோம். வணிகத்தின் வெற்றிக்குரிய தூண்களான கடுமையான உழைப்பு, நம்பிக்கை, நாணயம், வாடிக்கையாளர் மனநிறைவு என்பன பற்றி ஆராய்ந்தோம்.காந்தளக வணிக உரிமதாரர் ஒவ்வொருவரும் தத்தம் நிலையை எடுத்துக் கூறினர். இடம், காலம், ஆட்சி, விளம்பரம், போக்குவரவு, மாலை நிகழ்ச்சிகள், தொடக்கவிழா, செய்தி, பள்ளிகளின் பங்களிப்பு, நாளாந்த வரவு செலவுக் கணக்கு, விற்பனைக் கழிவு போன்ற அனைத்தையும் அலசி ஆராய்ந்தோம். தமிழகமெங்கும் சமகாலத்தில் 25 புத்தகக் காட்சிகளை நடத்த முடியுமென்ற நம்பிக்கையை எமக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தந்தது.நல்ல அடித்தளத்தை அமைத்து, மனிதவளத்தைப் பயன்படுத்தித் தமிழ்நூல் விற்பனைப் பெருக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் விற்பனையாளர் வலைப்பின்னலுக்கு வலிமையூட்ட வியூகம் வகுத்தோம்.எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர் குழுமத்தைக் கலைஞன்/அநுராகம் நந்தா அணுகினார். அவர்களின் வெளியீடான தினமணியை இந்த முயற்சியில் இணையுமாறு கேட்டார். இசைவைப் பெற்றார்.இந்த வரிகளை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ்நாட்டில் 27 நகரங்களில் தினமணி காந்தளகம் அநுராகம் இணைந்த தமிழ்நூல் கண்காட்சிகள் நடந்துக் கொண்டிருக்கும். தமிழ்நூல் பதிப்பு விற்பனை வரலாற்றில் இதுவே முதல் முயற்சி.தாமரைச் செல்வர் திரு. சுப்பையா வீடுவீடாகச் சென்று தமிழ்நூல் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதை அவர் வழிவந்த முத்துக்குமார சுவாமி தம்பதியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தெருவோரங்கலில் பந்தலிட்டும், பள்ளிகளுக்குள் சென்றும். பேருந்தில் அனுப்பியும் தமிழ்நாடெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கியதைக் கண்ணால் பார்த்திருக்கிறேன்.ஒரேகாலத்தில் தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில், அதுவும் இதுவரை புத்தகக் காட்சி நடைபெறாத பல நகரங்களில் பத்து நாள்களுக்குத் தொடர்ந்து புத்தகக் காட்சியை நடத்துவது தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.காந்தளகமும், தினமணியும், அநுராகமும் கைகோர்த்து இம்முயற்சியில் இணைந்திருக்கின்றன. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அடுத்துத் தமிழ்நாட்டில் 100 நகரங்களில் சமகாலத்தில் புத்தகக் காட்சியை நடத்தக் காந்தளகம் முன்வரும். இணைந்து நடத்த மூத்த தமிழ்ப் பதிப்பகங்கள் பல காத்திருக்கின்றன. காந்தளகத்துடன் இணைந்து அனைத்துத் தமிழ்ப் புத்தகங்களையும் உங்கள் ஊரிலேயே விற்பனை செய்யவும், புத்தகக் காட்சிகள் நடத்தவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: காந்தளகம், 68, அண்ணாசாலை, சென்னை 600 002.இவ்வாறு மறவன்புலவு க. சச்சிதானந்தன் கூறினார்.

எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு

இருசாரார் உரிமைகளைக் காக்கும்
எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மொழி பெயர்ப்பாளர் சங்கத்தின் கூட்டம். வந்திருந்தவர் அத்தனை பேரும் தரமிக்க படைப்பாளிகள். காலை வந்தவர்கள், நிகழ்ச்சிகள் மாலையில் முடியும் வரை தங்கி, முழுமையாகத் தம்மை வெளிக்காட்டிச் சென்றார்கள்.
பற்பல பொருள்களில் கலந்துரையாடல்கள் நிகழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் அவர்களுட் பலரும் பதிப்பாளர் தரவேண்டிய உரிமை ஊதியம் பற்றியே பேசினர். பதிப்பாளர் உரிய முறையில் படைப்பாளிகளுக்கு உரியதைச் செய்வதில்லை என்ற கருத்து மேலோங்கி நின்றது.
பதிப்பாளருடன் ஒப்பந்தம் எழுதுவதில்லையா? என வினவினேன். இல்லை என்ற கருத்தே மேலோங்கி நின்றது. தெரிந்தவர்கள், நம்பிக்கையாகவும் நாணயமாகவும் நடப்பார்கள், எனவே ஒப்பந்தம் உடன்பாடு என்று போவதில்லை, தருவதை வாங்கிக் கொள்கிறோம், தராவிட்டாலும் கேட்பதில்லை, பதிப்பாளராக உணர்ந்து தரவேண்டும் அல்லது மொழிபெயர்ப்பாளர் சங்கம் ஆவன செய்யவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது.
21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். புலமைச் சொத்துரிமை பற்றிய சட்டங்கள் மலிந்த காலம். உலகம் முழுவதும் மஞ்சள் தொடக்கம் திரைப்படத் திருட்டு வரை பதிப்புரிமை பற்றிப் பேசியும் எழுதியும் நீதிமன்றங்கள் வரையும் செல்லும் காலத்தில், தமிழ்ப் படைப்பாளிகளுக்கும் தமிழ்ப் பதிப்பாளருக்கும் இடையே நல்லுறவு குறைவாக இருப்பது வியப்பாக இருந்தது.
பதிப்புத் தொழில் உலகம் ஆனி இதழில், பதிப்பாளர் விற்பனையாளர் உடன்பாடு பற்றிய என் குறிப்புகள் வெளியானதும் பலர் பாராட்டினர். காலத்தின் தேவை என்றனர். முதல் பாராட்டைத் தெரிவித்தவர் இக்கின்பாதம்ஸ் நிறுவனத்தில் உள்ளவர்கள். வளர்தொழில் இதழில் அப்படியே அந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்தனர். அமுதசுரபி போன்ற சில நிறுவனங்கள் அந்த உடன்பாட்டு வரிகளை எடுத்து, தமது விற்பனையாளருடன் உடன்பாட்டைச் செய்துகொண்டன.
கிழக்குப் பதிப்பகத்தார் ஆங்கிலத்தில் உள்ள எழுத்தாளர் - பதிப்பாளர் படி ஒன்றை எனக்கு அனுப்பி, தமிழிலும் அத்தகைய உடன்பாட்டு வரிகளின் அவசியத்தை உணர்த்தியவர் கவிஞர் அண்ணா கண்ணன். மொழிபெயர்ப் பாளர் சங்கக் கூட்டத்தில் இத்தகைய உடன்பாட்டு மாதிரி ஒன்றன் தேவையை முழுமையாக உணர்ந்தேன்.
எழுத்தாளர் - பதிப்பாளர் உடன்பாடு இன்றி, காலம் காலமாகத் தமிழ்ப் பதிப்புலகம் வாழ்ந்து வருகிறதே, உடன்பாட்டின் அவசியம் ஏன் எனப் பதிப்பாளர் பலர் வினவுவர்.
தனது படைப்பு அச்சுவாகனம் ஏறினால் போதுமென்று தவிக்கும் எழுத்தாளரையும், பதிப்பித்த நூல்கள் விற்காத தேக்கத்தின் ஏக்கத்தில் வாடும் பதிப்பாளரையும் சட்டபூர்வமாக இணைக்காமலே ஆண்டுக்கு தோராயமாக 5,000 தமிழ்த் தலைப்புகள் வரை வெளிவருகின்றன.
அடுத்துவரும் மாதிரி உடன்பாடு முன்னோட்டப் படிவமே. இதில் உள்ள வரிகளைத் தேவைக்கேற்றவாறும், சூழ்நிலைக்கேற்றவாறும் மாற்றலாம், திருத்தலாம், புதியதைச் சேர்க்கலாம். ஆனாலும் சட்டத்தின் வட்டத்தை விட்டு வெளியேறாது பார்க்க.
இந்த உடன்பாட்டு வரிகள் வெளியானபின் அதைத் துணைக் கொள்வோர் நம்பகத்தன்மை வட்டத்தை விட்டு வெளி வந்தவரல்ல. நம்பகத் தன்மை சட்டங்களுக்கு அப்பாற்பட்டது. சட்டங்கள் செய்யமுடியாததை நம்பகத்தன்மை நிலைநாட்டிவிடும்.
ரூ. 20 உக்குரிய முத்திரைத் தாள். அதில் தெளிவான தவறற்ற சொற்களின் தொகுப்பான உடன்பாட்டு வரிகள். எழுத்தாளரும் பதிப்பாளரும் சாட்சிகளுடன் இடும் கையொப்பம். அந்தக் கையொப்பங்களை உறுதிசெய்யும் நொத்தாரிசுகளின் கையொப்பம். உடன்படுக, வளர்க.
உடன்பாடு
சென்னை, கார்வண்ணப்பேட்டை (அஞ்சல்குறி: 600000), திருநகர்ச் சாலை, 15ஆம் எண்ணில் உள்ள சிங்கப்பூர்ப் பதிப்பக உரிமையாளர் சிற்றம்பலம் மகன் முருகன் முதற்பகுதியாராகவும்
தென்னன்குடி மாவட்டம், பூநகர் (அஞ்சல்குறி: 688888), ஆற்றுச் சாலை, 25ஆம் எண்ணில் வசிக்கும் எழுத்தாளர் பறம்புமலையான் மகன் கபிலர் இரண்டாம் பகுதியாரகாவும் செய்து கொள்ளும்
உடன்பாடு / ஒப்பந்தமாவது:
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் ஆர்வத்தினால், தரம் வாய்ந்த தமிழ்நூல்களைப் பதிப்பிப்பதைத் தொழிலாகக் கொண்ட முதற்பகுதியார், எழுத்தாளர் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகளைப் பெற்றும், தாம் பணி கொள்ளும் எழுத்தாளர்களிடமிருந்து படைப்பு களைப் பெற்றும் பதிப்பாசிரியர் மூலம் அப்படைப்புகளைத் தம் பதிப்பகக் கொள்கைக் கேற்ப ஒழுங்கு செய்து, அச்சிடுவித்து, பதிப்பித்து, தம் வெளியீடுகளை விற்பனைக்கு வைக்கும் சேவையைச் செய்து வருகிறார். இனிமேல் இந்த ஆவணத்தில் முதலாம் பகுதியாரது பணி சேவை எனப்படும்.
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் எழுத்து களையும் படைப்புகளையும் எழுதி வரும் இரண்டாம் பகுதியார் தன் படைப்பு களுக்குரிய சட்டபூர்வமான உரிமதாரர் ஆவர். இரண்டாம் பகுதியார் தன் படைப்புகளைத் தனக்கு உகந்த பதிப்பாளர் ஒருவரிடம் கொடுக்கும் உரித்துடையவர். இனிமேல் இந்த ஆவணத்தில் இரண்டாம் பகுதியாரின் எழுத்துகள் படைப்பு எனப்படும்.
தரமான நல்ல நூல்களைப் படைத்து அறிவுப் பரம்பலைப் பெருக்கும் நோக்கம் கொண்ட இரண்டாம் பகுதியார், முதற்பகுதியாரின் பதிப்பு ஆர்வத்தை அறிந்துகொண்டு, முதற்பகுதியாரின் சேவையை நாடி, முதற் பகுதியாருக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்ததாலும்,
இரண்டாம் பகுதியாரின் விருப்பத்தை ஏற்று, அவருக்குத் தன் சேவையை வழங்க முதற்பகுதியார் உடன்படுவதாலும்,
மேற்கண்ட இரு பகுதியாரும் கீழ்க்காணும் விதிகளுக்கமையச் செயற்பட உடன்படுகின் றனர்.
விதிகளாவன:
1. முதற்பகுதியாரின் உரிமைக ளும் கடமைகளும்.
1.1 தான் இவ்வுடன்பாட்டின் கீழ் கொடுக்கும் படைப்பில் எவ்வித வணிக இரகசியமோ, காப்புரிமையோ, பதிப்புரிமையோ, தனியுரிமையோ, வெளியீட் டுரிமையோ, நம்பிக்கையுரிமையோ, வேறு எவரது எவ்வித உரிமையையோ மீறவில்லை, பாதிக்கவில்லை என்ற உறுதிமொழியை இரண்டாம் பகுதியார் முதற்பகுதியாருக்குக் கொடுக்கிறார்.
1.2 இந்தப் படைப்புக்கு இந்த உடன் பாட்டுக் காலத்தில் தாள் மூலம் அல்லது மின்னியல் மூலம் அச்சிட்டு மின் தளத்திலிட்டு அல்லது குறுந்தகடாக்கி, மின் புத்தகமாக்கி, ஒலி/ஒளிப் பேழைகளாக்கி புதிதாக வரும் பிற தொழில்நுட்பங்கள் மூலம் வெளியிட்டு, பதிப்பித்து விற்பனை செய்யும் முழு உரிமையை முதற்பகுதியாருக்கு இரண்டாம் பகுதியார் வழங்குகிறார்.
1.3 இவ்வுடன்பாடு கையொப்பமிட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு எவ்விதத் தடையும் குந்தகமும் இன்றி இந்தப் படைப்பை அச்சிட்டு வெளியிடும் முழுமையான உரிமையை முதற்பகுதியாருக்கு இரண்டாம் பகுதியார் வழங்குகிறார். இரண்டாம் பகுதியார் கூறும் புதிய விதிகளை ஏற்று இவ்வைந்தாண்டு காலத்திற்குப் பின்னரும் இப்படைப்பை வெளியிடும் முன்னுரிமை முதற்பகுதியாருக்கே உண்டு. முதற்பகுதியார் வெளியிட மறுத்தாலோ புதிய விதிகளை ஏற்க மறுத்தாலோ இரண்டாம் பகுதியார் வேறொரு பதிப்பாளரை நாடும் உரித்துடையர்.
1.4 இப்படைப்பினைச் சுருக்கவும் திருத்தவும் மாற்றவும் பதிப்பொழுங்கு செய்யவும் மீள்ஒழுங்கு செய்யவும் முதற் பகுதியாருக்கு அனைத்து உரிமைகளையும் இரண்டாம் பகுதியார் வழங்குகிறார்.
1.5 கதை, நாவல் மற்றும் புதினமாக இருப்பின், இப்படைப்பு வேறு எந்தப் படைப்பிலிருந்தும் எடுத்துச் செருகப்பட வில்லை என்ற உறுதிமொழியை இரண்டாம் பகுதியார் முதற்பகுதியாருக்குக் கொடுக்கி றார். இந்தப் படைப்பு முற்றுமுழுதாக தனது என்றும் உறுதிமொழிகிறார். வேறு எந்தப் படைப்பிலிருந்தும் உருவிச் செருகப்பட்டதோ புகுத்தப்பட்டதோ என்ற கோரிக்கையை எவராவது இப்படைப்புத் தொடர்பாக வைத்தால், அக்கோரிக்கைக்குப் பதில் அளிக்கவும் பொறுப்பேற்கவும் இரண்டாம் பகுதியார் முழழுமையாக ஒப்புகிறார்; அக்கோரிக்கை தொடர்பாக முதற்பகுதி யாருக்கு எவ்வித இழப்பும் வராது, இரண்டாம் பகுதியார் பார்த்துக்கொள்வார் எனவும் உறுதி கூறுகிறார்.
1.6 கதை, நாவல் புதினம் தவிர்ந்த பிற படைப்புகளுக்கு வேறு நூல்களிலிருந்தோ ஆக்கங்களிலிருந்தோ மேற்கோள் காட்டும் பொழுது அம்மேற்கோள்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை ஆங்காங்கேச் சுட்டிக் காட்டி நன்றி கூற இரண்டாம் பகுதியார் கடமைப்பட்டிருக்கிறார். பிற படைப்பு களிலிருந்து எடுத்தாள அப்பதிப்பாளர் மற்றும் படைப்பாளரிடமிருந்து உரிமத்தைப் பெற்றுக் கொள்வது இரண்டாம் பகுதியாரின் கடமை யாகும். இவ்வாறான உரிமைகளைப் பெறு வதில் முதற்பகுதியாரின் உதவியை இரண்டாம் பகுதியார் கோரலாம்.
1.7 நாளிதழ், வார இதழ், மாத இதழ் போன்ற இதழ்களில் தொடர்கதையாக அல்லது கட்டுரையாக வெளிவந்த படைப்பாக இப்படைப்பு இருப்பின் அந்த இதழின் பதிப்பாளரிடமிருந்து தடையில்லாச் சான்றி தழை இரண்டாம் பகுதியார் பெற்று அச்சான்றி தழின் நகல் ஒன்றை முதற்பகுதியாருக்குக் கொடுக்க உடன்படுகிறார்.
1.8 கையெழுத்துப் படியாகவோ, தட்டச்சுப் படியாகவோ, கணிப்பொறிக் கோப்பாகவோ இரு பகுதியாரும் ஒப்புக்கொள்ளும் எழுத்து களாக இப்படைப்பை முதற்பகுதியாருக்குக் கொடுக்கவும், அச்சுக்குப் போகும் முன் மெய்ப்புப் பார்த்து, குறிப்பிட்ட கால எல்லை க்குள் இறுதி வடிவத்தில் ஒப்பமிட்டுக் கொடுக்கவும், வெளியீட்டின் இறுதி வடிவம் சரியானதாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொடுக்கவும் அதற்காக ஒத்துழைக்கவும் இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
1.9 இப்படைப்பின் வெளியீடு மக்களுக்குச் சென்றடையும் முகமாகச் சந்தைப்படுத்தலு க்காக ஊடகங்களுக்குத் தகவல் கொடுக்கவும், தனது படங்களைக் கொடுக்கவும், புத்தகக் காட்சிகளில் வந்து வாசகருக்கு ஒப்பமிட்டுக் கொடுக்கவும். பிற வகைகளில் முதற் பகுதியாருக்கு விளம்பரங்களில் உதவவும், இரண்டாம் பகுதியார் உடன்படுவதுடன் தனது முழுமையான வாழ்க்கை வரலாற்றுக் குறிப் பைக் கொடுக்கவும் இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
2. உரிமை ஊதியம்
2.1 இப்படைப்பை வெளியிட்டு விற்பதால் வரும் அனைத்து வருவாயிலும் 10% தொகையை இரண்டாம் பகுதியாருக்கு உரிமை ஊதியமாகக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார். வெளியீட்டின் ஒன்றன் விலையே உரிமை ஊதியத்தைக் கணக்கிடும் தரவு ஆகும்.
2.2 முதல் பதிப்பில் அச்சிடும் படிகளின் எண்ணிக்கைக்குரிய விலைத் தொகையின் 10% தொகையை உரிமை ஊதிய முற்பணமாக இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற் பகுதியார் உடன்படுகிறார். அதற்கு அடுத்த பதிப்புகளுக்கு, முதற்பகுதியாரின் நிதியாண்டு இறுதியில் அந்த ஆண்டில் விற்ற தொகையில் 10% தொகையைக் கணக்கிட்டு இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார்.
2.3 இரண்டாம் பகுதியார் தரும் படைப்பின் கையெழுத்துப் படியையோ பிற எழுத்து வடிவத்தையோ பெற்றுக்கொண்டதாகக் கடிதம் கொடுக்கும்பொழுதே உரிமை ஊதிய முற்பணத்தையும் இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுகிறார். கொடுப்பனவைகளில் கழிக்கும் வருமான வரி விதிகளைக் கடைப்பிடிக்க இருபகுதியாரும் உடன்படுகின்றனர்.
2.3 தமிழக அரசு மற்றும் அரசுகள் அல்லது நிறுவனங்கள் கொள்வனவு விலையை நிர்ணயித்தால் அந்த விலையே அக்கொள்வனவுப் படிகளுக்குரிய விலைத் தொகையாகும். அதற்கமைய இரண்டாம் பகுதியார் பெற்ற முற்பணத்தொகையில் முதற்பகுதியாருக்கு மீளளிக்கவேண்டும்.
3. பதிப்பாளரின் உரிமைகளும் கடமை களும்.
3.1 இவ்வுடன்பாட்டிற்கமைய இரண்டாம் பகுதியாரின் படைப்பைத் தன் சேவைக்காகப் பெறும் முதற்பகுதியார், பெற்றதற்கான கடிதத் தை இரண்டாம் பகுதியாருக்குக் கொடுப்ப துடன் இந்த உடன்பாட்டு ஆவணத்தின் இணைப்பாக அக்கடிதத்தின் ஒரு படியைச் சேர்க்க வேண்டும்.
3.2 இப்படைப்பைப் பதிப்பிக்கும் ஒழுங்கு, அமைப்பு, வடிவம் போன்றவை பதிப்பாளரின் முயற்சியால் வருவதால் அதற்குரிய பதிப்பு ரிமை முதற்பகுதியாருக்கு உரியதாகும்.
3.3 வெளியிடும் காலம் இடம் முதலிய வற்றை முதற்பகுதியார் தீர்மானிப்பர்.
3.4 இப்படைப்பைத் தரமுள்ள தாள், அச்சு, கட்டு போன்றவற்றால் உயர்த்தி, சந்தைப் படுத்தும் வாய்ப்பைப் பெருக்கும் கடமை முதற்பகுதியாருக்கு உரியது. சந்தைப்படுத்தும் செலவுகளையும் முதற்பகுதியாரே ஏற்றுக் கொள்வர்.
3.5 எந்தெந்தத் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்திப் பதிப்பித்தாலோ வெளியிட்டாலோ, இப்படைப்பு மக்களைச் சென்றடையும் என்ற கருத்தை மனதில் கொண்டு ஒன்றுக்கும் மேற் பட்ட வழிமுறைகளைக் கையாண்டு இப் படைப்பு அறிவுப் பரம்பலுக்கு உற்ற துணை யாக அமையுமாறு முதற்பகுதியார் பார்த்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்.
3.6 முதல் பதிப்பாகிலென், அதற்கு அடுத்த பதிப்புகளாயிலென், ஒவ்வொரு பதிப்பிலும் எத்தனை படிகளை அச்சிட்டுள்ளார் என்பதை முதற்பகுதியார், இரண்டாம் பகுதியாருக்கு அவை அச்சிட்டு வெளிவரும் காலத்தில் எழுத்து மூலம் அறிவிக்கக் கடமைப் பட்டுள்ளார். முதற்பதிப்பில் 1,200 படிகள் அச்சிட்டால் உரிமை ஊதியத்துக்காக 1,000 படிகளே கணக்கிடப்படும். எஞ்சிய 200 படிகள் சந்தைப்படுத்தல், விளம்பரம், அறிமுகம் போன்றவற்றிற்காகப் பயன்படும்.
3.7 ஒவ்வொரு பதிப்பிலும் 10 படிகளை இரண்டாம் பகுதியாருக்கு முதற்பகுதியார் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு பெற்ற படிகளை விற்பனைக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்வது இரண்டாம் பகுதியாரின் கடமையாகும்.
3.8 புத்தக விமர்சனத்துக்காக எவ்வெவ் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டுமென இரண்டாம் பகுதியார் விதந்துரைத்தாலும் எவரெவருக்கு, எவ்வெப்பொழுது அனுப்ப வேண்டும் என்பதை இறுதியாக முடிவெடுப் பவர் முதலாம் பகுதியாரே.
3.9 வெளியீட்டின் தரம், தாள், அட்டை, மேலுறை, படிகளின் எண்ணிக்கை, அணிந் துரை எழுதுபவர் புகைப்படங்களை உள்ளடக் குதல், இணைப்புகளைச் சேர்த்தல் போன்ற வற்றைத் தீர்மானிப்பவர் முதற் பகுதியாரே. அத்துடன் நூலது விற்கும் விலையைத் தீர் மானிப்பவரும், விற்பனைக் கழிவுகளைத் தீர்மானிப்பவரும் முதற்பகுதியாரே. விளம்பர உத்திகள், விளம்பர ஊக்குபொருள்கள், ஊட கங்கள் போன்றவற்றை தெரிவு செய்து தீர் மானிப்பவரும் முதற்பகுதியாரே.
4. உடன்பாடு
4.1 இரண்டாம் பகுதியாருக்கு எழுத்து மூலம் ஒரு மாதத் தவணையைக் கொடுப்பதன் மூலம், காரணம் எதுவும் காட்டாமல் இரண்டாம் பகுதியாருக்கு இழப்பு ஏற்படாத வகையில் இந்த உடன்பாட்டிலிருந்து முதற்பகுதியார் விலகிக் கொள்ளலாம்.
4.2 இந்தப் படைப்புக்கு மட்டுமே இந்த உடன்பாடு பொருந்தும். இந்தப் படைப்புத் தொடர்பாக இரண்டாம் பகுதியார் வேறொரு வருடரேனும் செய்துகொண்ட உடன்பாட்டி னால் இந்த ஒப்பந்தம் - உடன்பாடு பாதிப் புறாது, வலுவுள்ளதாகவே இருக்கும்.
4.3 இந்த உடன்பாட்டில் இரு பகுதியாரும் பெறும் உரிமைகளையும், கடமைகளையும் இவ்வுடன்பாட்டுக் காலத்தில் வேறெவருக்கும் சார்புபடுத்த முடியாது.
இவ்வுடன்பாடும் ஒப்பந்தமும் இருபகுதி யாராலும் ஏற்படும் நோக்கம் உலகெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்குவதும் அதன் மூலம் கல்வியும் அறிவும் பெருகுவது மேயாகும் என இரு பகுதியாரும் உடன் படுகின்றனர்.
எனவே இவ்வுடன்பாட்டுக் காலத்தில், இப்படைப்பின் விற்பனையைப் பெருக்கப் போதுமான முயற்சிகளை முதற்பகுதியார் செய்து வருகிறார் என்பதற்கான சான்றுகளை இரண்டாம் பகுதியாருக்கு ஆண்டு தோறும் முதற்பகுதியார் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.
இவ்வுடன்பாடு / ஒப்பந்தத்தை மீறி இரண் டாம் பகுதியார் நடந்து கொள்வதால் / கொண் டதால் முதற் பகுதியாருக்கு ஏற்படும் இழப்பு களையும் செலவுகளையும் விரயங்களையும் முதற் பகுதியாருக்குக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
இவ்வுடன்பாடு தொடர்பான வழக்குகள் சென்னை (அல்லது பதிப்பாளரின் ஊரின்) மாநகர நீதிமன்ற வரையறைகளுக்குள் மட்டுமே பொருந்தும்.
மேற்காணும் பந்திகளில் கூறியவற்றை நன்றாக வாசித்துப் புரிந்து கொண்டபின் இன்று திருவள்ளுவராண்டு 2036 புரட்டாதி 15ஆம் நாள் சனிக்கிழமை (01.10.2005), சென்னையில் முதற் பகுதியாரும் பின்னர் பூநகரில் இரண் டாம் பகுதியாரும் மனமொப்பி இவ்வுடன் பாட்டின் இருபடிகளில் நொத்தாரிசுகள் முன்னிலையில் கீழே ஒப்பமிட்டு உடன்பாட் டுப் படிகளை பரிமாறிக் கொள்கின்றனர்.
கையொப்பங்கள், சாட்சிகள்.

தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டிகள்

தமிழில் புத்தக வாசிப்புப் பழக்கம் பெருக
தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டிகள்
மொழி என்ற வண்டி இல்லாமல், எழுத்தாளர் இல்லை. மொழி அறிவு இருக்கும் சமூகமே நல்ல புத்தகங்களை உருவாக்க முடியும். மொழி அறிவுக்கு அடிப்படை சொல்லாட்சி. தனக்குள் இருக்கும் சொல் வங்கியுள் இருந்து தேவைக்கேற்பப் பொருத்தமான ஏற்ற, சரியான சொல்லை எடுத்தாளும் திறன் உடையோர் சிறந்த எழுத்தாளர்.
எழுத்துகளின் கூட்டே சொல். எழுத்து மாற, சொல் மாறும், சொல் மாறப் பொருள் மாறும். சரியான எழுத்துக்கூட்டல் தெரியாதவர் பேதையரே. எனவேதான் வளர்ச்சிக்கு உரிய சமூகம், தன் சிறார்களிடையே எழுத்துக்கூட்டல் பயிற்சியை வளர்க்கிறது.
அமெரிக்காவில் 1870ஆம் ஆண்டு தொடக்கம் சிறார்களுக்கு எழுத்துக்கூட்டல் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. எழுத்துக்கூட்டல் போட்டிகளின் விளைவாக ஆங்கில அகராதிக்குள் 12 இலட்சம் புதுச் சொற்கள் புகுந்துள. அண்மைக் காலங்களில் புலம்பெயர் இந்தியக் குழந்தைகள் இப்போட்டிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
அசாம் மொழியில் எழுத்துக் கூட்டல் போட்டிகளை இந்திய தேசிய புத்தக அறநிலையும், அசாமில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற இதழான முசாக்கும் இணைந்து நடத்தின.
2005 சூலை 2ஆம் நாள் இப்போட்டிகள் தொடங்கின. சோரிகத்து மாவட்டத்தில் தொடங்கிய இப்போட்டி, வேறு 9 மாவட்டங்களுக்கும் பரவ உள்ளது.
அசாமிய மொழி வழி கற்கும் குழந்தைகள் மட்டுமே இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
ஐந்தாம் வகுப்புத் தொடக்கம் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவர் மட்டுமே இப் போட் டியில் கலந்து கொள்ளலாம்.
அசாம் மொழியை வளர்க்கவும், வாசிப்புப் பழக்கத்தைப் பெருக்கவும் இந்தப் போட்டி மாணவருக்கு உதவும்.
எழுத்துக்கூட்டலைச் சரியாகக் கற்றுக் கொள்வதற்கு ஒரே வழி, வழுவற்ற படைப்புகளை வாசிப்பதே.
தமிழில் இரா. பி. சேதுப்பிள்ளை, மு.வரதராசனார், அ. ச. ஞானசம்பந்தன் போன்றோரின் படைப்புகளை மாணவர் வாசிக்க வேண்டும். கல்கியின் புதினங்களைப் படிக்க வேண்டும்.
இவ்வாறு வாசிக்கத் தொடங்கிய ஒருவர், சொற்களைத் தெரிந்து வாசிக்கப் பழகுகிறார். சொற்களும் அவற்றின் எழுத்துக் கூட்டலும் மாணவரின் நினைவில் ஆழமாகப் பதிகின்றன.
உச்சரிப்புக்கும் எழுத்துக்கூட்டலுக்கும் உள்ள தொடர்பு இறுக்கமடைகிறது. மாணவர் இவ்வாறு வாசித்து வரினும், பெற்றோரும் ஆசிரியரும் மேற்பார்வை செய்து வரவேண்டும். சரியான எழுத்துக்கூட்டல், சரியான உச்சரிப்பு இவற்றை மாணவருக்குப் பழக்கவேண்டும்.
மின்னணுக் கருவிகள் புழக்கத்துக்கு வந்தபின் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. எழுத்துக்கூட்டல் போட்டிகள் மாணவரை வாசிக்கத் தூண்டும். மொழி தொடர்பான அறிவைப் பெருக்கும். மொழி மீது காதலை வளர்க்கும்.
வட்டார வழக்குகளை வெளிக்கொணரும். அரிய பல சொற்கள் சிறு ஊர்களில் இருந்து வெளியே புழக்கத்துக்கு வரும். நாளும் பொழுதும் புதுப்புதுச் சொற்களுக்குத் தேவை இருக்கையில், ஏற்கனவே புழங்கிய நல்ல தமிழ்ச் சொற்களை மீண்டும் புழக்கத்தில் விட எழுத்துக் கூட்டல் போட்டிகள் உதவும்.
பிறமொழிச் சொற்களைத் தமிழாக்குகையில் எந்த ஒலிக்கு எந்தத் தமிழ் எழுத்து என்ற குழப்பம் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும். தமிழில் எழுத்துக் கூட்டல் போட்டிகள் நடத்தினால், இத்தகைய ஒலி மற்றும் மொழி மாற்றத்தில் சீர்மை வரும்.
அசாமில் நடத்திய முன் உதாரணம் இருப்பதால், தேசிய புத்தக அறநிலையை அழைத்தால் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து, இங்குள்ள அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் இணைந்து போட்டியை நடத்துவதில் உதவுவர்.
முதலில் குழந்தைகளிடையே வினாக்கொத்து ஒன்றை வழங்குவர். இந்த வினாக்கொத்தைத் தேசிய புத்தக அறநிலை தயாரித்து வைத்துள்ளது. குழந்தை ஒன்றின் வாசிப்புப் பழக்கம் எத்தகையது என்பதை அறிய இவ்வினாக்கொத்துக்கு அக்குழந்தைதருவிடைகள் தெரிவித்துவிடும்.
போட்டியை நடத்தும் முறைகள்:
மாணவர் அனைவரின் பெயர் களைப் பதிதல். ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டு. குலுக்கல் முறையில் சீட்டுகளைத் தேர்வதால் ஒரே பள்ளியில் பயிலும் இரு மாணவர் ஒன்றாக இருப்பதைத் தவிர்த்தல்.
9 சுற்றுக்களாகப் போட்டி.
முதல் சுற்றில் பொதுச் சொற்கள் எதையாவது எழுதச் சொலல்.
இரண்டாவது சுற்றில் பாட்டுக்குரிய சொல் எழுதுதல். பரவலாகத் தெரிந்த ஒரு தமிழ்ப் பாட்டு. அப்பாட்டுக்கு ஏற்ற பரத நாட்டியம். முதலில் பாட்டையும் நாட்டியத்தையும் வழங்கல். பின்னர் அதே பாட்டும் நாட்டியமும்: ஆனால் பாட்டு வரிகளில் சொற்கள் இடையடை வரா. அபிநயத்தை வைத்துப் பாட்டில் விடுபட்ட சொல்லைக் கண்டுபிடித்தல். சரியான எழுத்துக் கூட்டலில் அச்சொல்லை எழுதுதல்.
மூன்றாவது சுற்றுக் கதை சொல்லல்: கடல் நீர் ஏன் உப்பானது போன்ற சுவையான தலைப்பில் கதை ஒன்றைச் சொலல். அந்தக் கதையில் உணவுப் பொருள்களின் பெயர்கள் வரும். கதையைக் கவனமாகக் கேட்டபின், உணவுப் பொருள்களின் பெயர்களை எழுதச் சொல்லல். கவனித்தலுக்கும் எழுத்துக் கூட்டலுக்கும் சிறந்த பயிற்சி.
நான்காவது சுற்று: கணினி மூலம் திரையில் வீட்டுப் பொருள்கள் சிலவற்றைக் காட்டுதல். அப்பொருள்களின் பெயர்களை எழுதச் சொலல்.
ஐந்தாவது சுற்று: கணினி மூலம் வரலாற்றுச் சின்னங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஆறாவது சுற்று: கணினி மூலம் பறவைகளின் படங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஏழாவது சுற்று: கணினி மூலம் விலங்குகளின் படங்களைக் காட்டல். அவற்றின் பெயர்களை எழுதச் சொலல்.
ஏழு சுற்றுகளுக்கான விடைகளையும் தேர்வாளர் பார்த்து, சிறந்த மாணவர் பத்துப் பேரை அடையாளம் காணல்.
இந்தப் பத்துப் பேருக்கும் மீண்டும் எழுத்துக் கூட்டல் போட்டி நடத்துதல். ஒளி ஊடு செல்லும் தாளில் எழுத அதை மேசைஒளியைத் திரையில் காட்டும் கருவி மூலம் நடுவர் உடனுக்குடன் பார்த்துப் புள்ளியிட்டு முதல் மூன்று மாணவரைத் தேர்வர்.
முதலில் வட்ட அளவில், பின் மாவட்ட அளவில், பின் மாநில அளவில் என இப்போட்டியை நடத்துவதன் மூலம், மாணவரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்; மொழி அறிவை வளர்க்கலாம்; படைப்பாற்றலை வளர்க்கலாம்; தாய்மொழியிலேயே அனைத்தையும் செய்யலாம் என்ற தன்னம்பிக்கையை வளர்க்கலாம்.
அறிதல் - அரிதல்; மைலாப்பூர் - மயிலாப்பூர்; வழி - வளி - வலி; போன்ற நுணுக்கமான எழுத்துக் கூட்டல் பயிற்சி இளமையில் தமிழ் மாணவருக்கு வந்துவிட்டால், தமிழை விட்டு வேறெங்கும் அவர் போகார்.
தமிழ் நூல்களின் விற்பனை பெருகவேண்டுமானால், தமிழ் மாணவரின் வாசிப்புப் பழக்கம் பெருகவேண்டும். எழுத்துக்கூட்டல் போட்டிகள் இதற்கு உதவும்.
(தேசிய புத்தக அறநிலைச் செய்திக் கதிரின் 2005 ஆவணி இதழில் வெளிவந்த கட்டுரையைத் தழுவியது.)

பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாடு

பதிப்பாளரின் உரிமைகளைக் காக்கும்
பதிப்பாளர் - விற்பனையாளர் உடன்பாடு
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

வெட்கமும் வேதனையும் தருகின்ற சூழ்நிலையில், பதிப்பாளரும் விற்பனையாளரும் நம்பகத்தன்மையின் விளிம்பில் நிற்கின்றனர்.
காசைக் கொடு, பொருளை எடு என்ற கொள்கை 500 தலைப்புகளுக்கு அதிகமாக வெளியிடும் பெரும் பதிப்பாளரிடம் உண்டு. விற்காவிட்டாலும் பரவாயில்லை, கடனுக்குக் கொடுக்க மாட்டோம்; கடனுக்குக் கொடுத்துவிட்டு, தொகைக்காக அலைவதில் ஆகும் செலவு சொல்லொணாதது; இருப்பதைக் காப்போம்; என்கின்றனர் அவர்கள்.
75 - 500 தலைப்புகளை வெளியிடும் நடுத்தரப் பதிப்பாளர் பலருக்குக் கடன் கொடுக்க விருப்பம்; ஆனால் தொகை வந்து சேருமோ என்ற கவலை. இருப்பைத் தம்மிடம் வைத்திருப்பதைவிட விற்பனையாளரிடம் கொடுத்து வைத்தால் விற்பனையாகும் என்ற நியாயமான நப்பாசையுடன், ஓடுமீன் ஓடி உறுமீன் ஆகும் நம்பகத் தன்மையுள்ள விற்பனையாளரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
15 - 75 தலைப்புகளை வெளியிடும் சிறு பதிப்பாளர் பலருக்குக் கடன் கொடுத்து விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. விற்பனையாளரைத் தேடும் இவர்கள், இருப்பில் தேங்கியுள்ள நூல்களைப் பார்த்து எரிச்சலடைகின்றனர்.
1 -15 தலைப்புகளை வெளியிடும் மிகச் சிறு பதிப்பாளர், கழிவை அதிகமாகக் கொடுத்தும் கடனுக்குக் கொடுத்தும் தம் நூல்களை விற்பனையாளர் அடுக்குகளில் காட்சிக்கு வைக்க விரும்புகின்றனர்.
தோராய மதிப்பீடாக, 15 அரசுசார் நிறுவனப் பதிப்பாளர், 25 பெரும் பதிப்பாளர், 75 நடுத்தரப் பதிப்பாளர், 200 சிறு பதிப்பாளர், 1300 மிகச் சிறு பதிப்பாளர் - தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் உள்ளனர் எனலாம்.
தோராய மதிப்பீடாக, இவர்கள் அனைவருமாக இணைந்து சமகாலத்தில் 30,000 - 40,000 தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்; ஆண்டொன்றிற்கு 3,000 புதிய தலைப்புகளை வெளியிடுகின்றனர். 1,500 பழையதலைப்புகளை மீள்பதிப்பிக்கின்றனர்.
இவர்களுள், சிறு பதிப்பாளரும், மிகச் சிறு பதிப்பாளருமாக உள்ளோர், பதிப்புத் தொழிலை மட்டும் நம்பி வாழ்க்கையை நடத்துவோரல்லர். பதிப்புத் தொழிலுக்குள் புகும் அதே வேகத்தில் காலப்போக்கில் அதைவிட்டு வெளியேறியும் விடுகின்றனர். வெளியேறுவோர் இடங்களைப் புதிதாக நுழைவோர் நிரப்புகின்றனர்.
இப் பதிப்பாளர் தேடும் விற்பனையாளர் எங்குளர்? தமிழகத்தில், புதுச்சேரியில், இலங்கையில், மலேசியாவில், சிங்கப்பூரில், ஐரோப்பிய - வட அமெரிக்க நாடுகளில், ஆஸ்திரேலியாவில் எனத் தமிழ் நூல்களின் விற்பனையை முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் இருக்கின்றனர். பெரும் பதிப்பாளரின் வெளியீடுகளில் தோராயமாக 30% நூல்கள் தமிழகத்துக்கு அப்பால், வெளிநாடுகளில் விற்பனையாகின்றன.
தமிழ்கூறும் நல்லுலகில் நம்பகத்தன்மையுள்ள விற்பனையாளர் யார்? இந்த வினாவுக்கு விடை காண முடியாத தவத்திரு ஆறுமுக நாவலர், சென்னை, சிதம்பரம், யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் பதிப்பகமும் விற்பனை நிலையமும் தொடங்கினார். தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலைத் தொடக்கியவர் அவரே. 145 ஆண்டுகளாக அந்த விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன.
தாமரைத்திரு. சுப்பையா, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் கிளைகளைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிறுவினார்.
நியுசெஞ்சுரி புத்தக நிலையத்தினர் தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலைத் தமிழகமெங்கும் விரித்துப் பெருக்கினர்.
லிப்கோ நிறுவனம் சட்டபூர்வ முகவர்களைத் தமிழ் நாடெங்கும் நியமித்து, தம் வெளியீடுகள் தமிழ் மக்களைச் சென்றடையுமாறு பார்த்துக் கொள்கிறது.
பழநியப்பா பிரதர்ஸ், மணிவாசகர் பதிப்பகம் ஆகியோரின் விற்பனை நிலையங்களில் பாடநூல் மற்றும் துணை நூல்களைத் தமிழகமெங்கும் விற்பனை செய்வதுடன் தமிழ்நூல்களும் விற்பனையாகின்றன.
கண்ணதாசன் பதிப்பகமும் மொத்த விற்பனைக் கிளைகளை உருவாக்கி வருகிறது.
காவ்யா பதிப்பகத்தார் பங்களூரிலும் சென்னையிலும் தம் வெளியீடுகளை விற்கின்றனர்.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விருதுநகர், புதுச்சேரி, விழுப்புரம், தேவகோட்டை, காரைக்குடி, திண்டுக்கல், பழநி, தேனி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி போன்ற பல இடங்களில் தனித்தனி விற்பனையாளர் பலர் உளர்.
இவர்களைத் தவிர, புத்தக விற்பனையில் ஆர்வமுள்ள பலர் சிறு விற்பனையாளராகத் தமிழகத்தின் பல ஊர்களில் தோன்றுவதும் மறைவதுமாக உளர்.
இந்தப் பின்னணியில், தமிழகமெங்கும் 25 வணிக உரிமதாரர்களைக் காந்தளகம் நியமித்து, தமிழ்நூல் விற்பனை வலைப்பின்னலை நம்பகத்தன்மையுள்ளதாக மாற்ற முயன்று வருகிறது.
இத்தகைய விற்பனையாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையேயான தொடர்புகள் நம்பகத்தன்மை உடையதாக இல்லாததால், தமிழ்நூல் விற்பனைக்கு உரிய இலக்குகள் தெளிவாகத் தெரி வதில்லை.
எழுத்தாளருக்கும் வாசகருக்கும் இடையே பதிப்பாளரும் விற்பனையாளரும் நூலகங்களும் பாலங்களாக இருக்கின்றன. இதனால் பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையே சட்டபூர்வ நம்பகத்தன்மை என்ற பாலம் தேவையாக உள்ளது.
இன்றைய நிலையில், 20 ரூபாய் முத்திரைத் தாளில் பதிப்பாள ரும் விற் பனையாளரும் சட்டபூர்வ உடன்பாட்டைச் செய்து கொள்வதால், பதிப்பாளரின் சொத்துக்கு விற்பனையாளர் சட்டபூர்வப் பாதுகாப்பாளராகுவர்.
மாதிரிக்காக, சிங்கப்பூர்ப் பதிப்பகத்தாருடன் பூநகர்க் காந்தளகம் என்கின்ற விற்பனையாளர் செய்து கொண்டதான உடன்பாட்டு வரிகளைக் கீழே தந்துள்ளேன். நொத்தாரிசு ஒருவர்முன் இந்த உடன்பாட்டில் ஒப்பமிட்டால் உடன்பாட்டு விதிகள் சட்டவலுவைப் பெற்றுவிடுகின்றன.
பதிப்பாளர் விற்பனையாளர் பயன்பெறுவார்களாக.
உடன்பாடு / ஒப்பந்தம்
சென்னை, கார்வண்ணப்பேட்டை (அஞ்சல்குறி: 600000), திருநகர்ச் சாலை, 15ஆம் எண்ணில் உள்ள சிங்கப்பூர்ப் பதிப்பக உரிமையாளர் சிற்றம்பலம் மகன் முருகன் முதற்பகுதியாராகவும்
தென்னன்குடி மாவட்டம், பூநகர் (அஞ்சல்குறி: 688888), ஆற்றுச் சாலை, 25ஆம் எண் பூநகர்க் காந்தளக வணிக உரிமதாரர் பறம்புமலையான் மகன் பாரி இரண்டாம் பகுதியாரகாவும் செய்து கொள்ளும்
உடன்பாடு / ஒப்பந்தமாவது:
அறிவுப் பரம்பலுக்கு வித்தாகும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் ஆர்வத்தினால், தரம் வாய்ந்த தமிழ்நூல்களைப் பதிப்பிப்பதைத் தொழிலாகக் கொண்ட முதற்பகுதியார், தமிழகத்திலும் புதுச்சேரியிலும், பிற மாநிலங்களிலும் தம் வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பியதாலும்,
தரமான நல்ல நூல்களை மக்களுக்கு விற்பனைசெய்து, அறிவுப் பரம்பலைப் பெருக்கும் அதே நோக்கம் கொண்ட இரண்டாம் பகுதியார், முதற்பகுதியாரின் விற்பனை ஆர்வத்தை அறிந்துகொண்டு, முதற்பகுதியாரின் வெளியீடுகளைத் தென்னன்குடி மாவட்டம், பூநகர்ப் பகுதியில் வாழும் மக்களுக்கு விற்பனை செய்ய விரும்பி, முதற் பகுதியாருக்குத் தன் விருப்பத்தைத் தெரிவித்ததாலும்,
இரண்டாம் பகுதியாரின் விருப்பத்தை ஏற்று, அவருக்குத் தன் பதிப்பு மற்றும் வெளியீடுகளைத் தென்னன்குடி மாவட்டம், பூநகர்ப் பகுதியில் வாழும் மக்களிடம் விற்பனை செய்வதற்குக் கொடுக்க முதற்பகுதியார் உடன்படுவதாலும்,
மேற்கண்ட இரு பகுதியாரும் கீழ்க்காணும் விதிகளுக்கமையச் செயற்பட உடன்படுகின்றனர்.
விதிகளாவன:
1. தாம் பதிப்பித்து வெளியிடும் நூல்களின் விவரப் பட்டியலை அவ்வப்போது இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
2. மேற்காணும் நூல்விவரப் பட்டியலில் உள்ள தலைப்புகளில், தனது பகுதியில் விற்பனையாகக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்து, அவற்றில் ஒவ்வொரு தலைப்பிலும் ஐந்துக்கு மேற்படா எண்ணிக்கையில் நூல்களை அனுப்புமாறு முதற் பகுதியாரை எழுத்தில் கோர இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
3. இரண்டாம் பகுதியார் கோரும் தலைப்புகளை, அத்தலைப்புகளின் இருப்பு நிலையைக் கருத்தில்கொண்டு, அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
4. நூலின் விலையில் 40%ஐ விற்பனைக் கழிவாக இரண்டாம் பகுதியாருக்குக் கொடுக்க முதற் பகுதியார் உடன்படுகிறார்.
5. வரிசை, நூலின் பெயர், ஒன்றன் விலை, எண்ணிக்கை, மொத்த விலை, கூட்டுத் தொகை, 40% கழிவு போக எஞ்சிய தொகை ஆகியன கொண்ட விற்பனைப் பட்டியலை முதற் பகுதியார் தயாரித்து, அதில் இரு படிகளை இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
6. விற்பனைப் பட்டியலில் உள்ள நூல்களை, தரமான, பாதுகாப்பான அட்டையில் சேதாரம் ஏற்படாப் பொதியாக்கி, தன் செலவிலேயே அப்பொதியை இரண்டாம் பகுதியாருக்கு அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
7. பொதியைப் பெறுவதில் உள்ள உள்ளூர்ச் செலவுகளை ஏற்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
8. பொதியைப் பெறச்செல்லும் இரண்டாம் பகுதியார், புறச் சேதாரங்கள் பொதியில் இருப்பின், முதற்பகுதியாரின் கவனத்திற்குக் கொணர்ந்து, பொதியைப் பெறாது திருப்பி அனுப்பவோ, அல்லது, முதற்பகுதியாரின் எழுத்துவழி ஆணைக்கமைய ஒத்துழைக்கவோ இரண்டாம் பகுதியார் உடன்படு கிறார்.
9. புறச் சேதார மற்ற பொதி யாயின் உள்ளூர்ப் பொதியகற்றும் செலவுகளைக் கொடுத்து, தம்மிடம் எடுத்துவந்து, பொதியில் உள்ளனவும் முதற்பகுதியார் அனுப்பிய விற்பனைப் பட்டியலும் ஒத்திருக்கின்றதா என ஒப்புநோக்கி, உள்ள நிலையையும் உட் சேதாரம் இருப்பின் அதையும் சேர்த்து இரண்டாம் பகுதியார் எழுதி, முதற்பகுதியார் அனுப்பிய விற்பனைப் பட்டியலின் இரண்டாம் படியில் ஒப்பமிட்டு, ஒருவாரத்துள் முதற்பகுதியாருக்கு ஒப்பமிட்ட படியை அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
10. முதற் பகுதியாரின் புத்தகங்கள் இரண்டாம் பகுதியாரிடம் இருந்தாலும் அவை முதற்பகுதியாரின் சொத்து என்பதால், எந்நேரமும் முதற் பகுதியார் அவ்விருப்பைச் சோதிக்க விரும்பி இரண்டாம் பகுதியாரிடம் நேரடியாக வந்தோ, தன் சார்பாளரை எழுத்துமூலமாகச் சாட்டிப் பூநகருக்கு அனுப்பியோ கேட்டால், அவற்றின் இருப்பு நிலையை முதற் பகுதியாருக்குக் காட்ட இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
11. தென்னன்குடி மாவட்டம், பூநகரில் முதற் பகுதியாரின் வெளியீடுகளை விரைந்து விற்பதற்குரிய, விளம்பரம் உள்ளிட்ட அனைத்துச் சந்தைப்படுத்தல் உத்திகளையும் கையாள இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
12. முதற் பகுதியார் அனுப்பிய தலைப்பு ஒன்றின் அனைத்துப் படிகளும் விற்ற நிலையில், இரண்டாம் பகுதியார் கேட்கும் படிகளை, இருப்பு நிலை நோக்கி, உடனுக்குடன் அனுப்ப முதற் பகுதியார் உடன்படுகிறார்.
13. தமிழ்த் திங்கள் முதலாம் நாளுக்குச் சமமான ஆங்கிலத் திங்கள் பதினைந்தாம் நாளை ஒட்டி, ஒவ்வொரு திங்களும் முதற் பகுதியாரின் விற்பனைப் பட்டியலில் உள்ள தொடக்க இருப்பு நிலையையும், அப்பட்டியலில் உள்ள அடுத்த நீள் கட்டத்தில் அத்திங்களில் விற்ற எண்ணிக்கை நீக்கிய இருப்பையும், இருப்பின் விலைத் தொகையயும் தொடர்ச்சியாக எழுதி, கூட்டுத் தொகை இட்டு, 40%ஐக் கழித்த தொகையையும் இரண்டாம் பகுதியார் எழுதி, ஆங்கிலத் திங்கள் இருபதாம் நாளுக்கு முன்னர் முதற் பகுதியாருக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
14. மேற்படி பதின்மூன்றாம் விதியிலுள்ளவாறு திங்கள்தோறும் பட்டியலை அனுப்பும் பொழுது, அத்திங்களில் விற்ற தொகையைக் கழிவு நீக்கி, முதற் பகுதியாருக்கு, பணவிடை / வங்கி வரைவோலையாக ஒவ்வொரு ஆங்கிலத் திங்கள் இருபதாம் நாளுக்கு முன் அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
15. மேற்படி பதின்மூன்றாம் பதினான்காம் விதிகளைத் தனித்தனியாகவோ கூட்டாகவோ இரண்டாம் பகுதியார் ஒழுங்காககக் கடைப்பிடிக்காத பட்சத்தில், ஒரு திங்கள் தவணையில் தனது இருப்பு அனைத்தையும் விற்ற தொகையையும் தனக்கு அனுப்புமாறு முதற் பகுதியார் இரண்டாம் பகுதியாரைக் கோரினால், அதற்கமைய இரண்டாம் பகுதியார் முதற் பகுதியாரின் புத்தகங்கள் அனைத்தையும் சேதாரமற்றதாகக் கிடைக்கும் வகையில் பொதியாகக் கட்டித் தனது செலவிலேயே முதற் பகுதியாருக்கு அனுப்ப இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
16. மேற்படி ஒன்பதாம், பத்தாம், பதின்மூன்றாம் பதினான்காம் பதினைந்தாம் விதிகளைத் தனித் தனியாகவோ, கூட்டாகவோ இரண்டாம் பகுதியார் கடைப்பிடிக்காத பட்சத்தில், கடைப்பிக்காத நாளில் இருந்து ஒரு திங்களின் பின்னர் வரும் முதல் திங்களுக்கு, ஒரு தலைப்புக்கு ரூ. 100 வீதமும், இரண்டாவது திங்களில் ஒரு தலைப்புக்கு ரூ. 200 வீதமும், மூன்றாவது திங்களில் ஒரு தலைப்புக்கு ரூ. 300 வீதமும் தண்டத் தொகையாக முதற் பகுதியாருக்குக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார். மூன்று திங்களுள்ளும் இரு பகுதியாரும் கணக்கைத் தீர்க்காத நிலையில், முதற் பகுதியாருக்கு ஏற்படும் வழக்கறிஞர் மற்றும் நீதிமன்றச் செலவுகளைக் கொடுக்க இரண்டாம் பகுதியார் உடன்படுகிறார்.
இவ்வுடன்பாடும் ஒப்பந்தமும் இருபகுதியாராலும் ஏற்படும் நோக்கம் உலகெங்கும் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்குவதும் அதன் மூலம் கல்வியும் அறிவும் பெருகுவதுமேயாகும் என இரு பகுதியாரும் உடன்படுகின்றனர். எனவே இவ்வுடன்பாட்டுக் காலத்தில், தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கப் போதுமான முயற்சிகளை இரண்டாம் பகுதியார் செய்து வருகிறார் என்பதற்கான சான்றுகளை முதலாம் பகுதியாருக்குத் திங்கள்தோறும் இரண்டாம் பகுதியார் அனுப்ப ஒப்புக் கொள்கிறார்.
இவ்வுடன்பாடு / ஒப்பந்தத்தை மீறி இரண்டாம் பகுதியார் நடந்து கொள்வதால் / கொண்டதால் முதற் பகுதியாருக்கு ஏற்படும் இழப்புகளையும் செலவுகளையும் விரயங்களையும் முதற் பகுதியாருக் குக் கொ டுக்க இரண் டாம் பகுதியார் உடன்படு கிறார்.
இவ் வணிக உரிமமும் அது தொடர்பானதுமான வழக்குகள் சென்னை (அல்லது பதிப்பாளரின் ஊரின்) மாநகர நீதிமன்ற வரையறைகளுக்குள் மட்டுமே பொருந்தும்.
மேற்காணும் பந்திகளில் கூறியவற்றை நன்றாக வாசித்துப் புரிந்து கொண்டபின் இன்று திருவள்ளுவராண்டு 2036 வைகாசி 18ஆம் நாள் புதன்கிழமை (01.04.2005), சென்னையில் முதற் பகுதியாரும் பின்னர் பூநகரில் இரண்டாம் பகுதியாரும் மனமொப்பி இவ்வுடன்பாட்டின் இருபடிகளில் நொத்தாரிசுகள் முன்னிலையில் கையொப்பமிட்டு ஒப்பந்தப் படிகளைப் பரிமாறிக் கொள்கிறோம்.
முதற்பகுதியார் இரண்டாம் பகுதியார்
சாட்சிகள் சாட்சிகள்

மின் தமிழ் நூல்கள்

இந்து வார இதழில்
சுபாசு செயன் எழுதிய கட்டுரையின் தமிழ்த் தழுவல்

மதுரைத் திட்டம் என ஒன்றைச் செவியுற்றிருக்கிறீர்களா?
தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னம்பலத்தில் அமைத்து, உலகில் எங்கே தமிழர் வாழ்ந்தாலும், எந்த நூலைப் படிக்க விரும்பினாலும் மின்னம்பலத்தில் வைத்தே படிக்கவோ, இறக்கிக் கணிப்பொறியில் வைத்துப் படிக்கவோ, அச்செடுத்துப் படிக்கவோ வசதிசெய்யும் திட்டமே மதுரைத் திட்டம்.
சுவிற்சர்லாந்தில் லோசேனில் வேதியியலாளராகப் பணிபுரிபவர் கலியாணசுந்தரம். 1995ஆம் ஆண்டுவாக்கில், அவருக்குத் தமிழைக் கணிப்பொறிக்குள் அடக்குவதில் ஆர்வம் பிறந்தது.
முதலில் மயிலை எனப் பெயரிட்ட தமிழ் அச்சுமுகம் ஒன்றை உருவாக்கினார்.
அடுத்துத் திருக்குறள் முழுவதையும் தட்டச்சுச் செய்தார். எவரும் மின்னம்பலத்தில் வாசிக்குமாறு ஏற்றினார்.
ஒத்த கருத்துள்ள பலர் கூடினர். கலியாணசுந்தரத்தைத் திட்டத் தலைவராக்கினர். 1998இல் மதுரைத் திட்டம் பிறந்தது.
இன்று அத்திட்டத்தில் உலகம் முழுவதும் 100பேருக்கு மேல் தொண்டுள்ளத்துடன் பணிபுரிகின்றனர். 200 தமிழ்நூல்கள் மின்னம்பலத்தில் ஏறியுள்ளன.
பாரதியார், பாரதிதாசன், கல்கி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போன்ற பலரின் நூல்களை மின்னம்பலத்தில் பார்க்கலாம்.
வைரமுத்து, ஜெயகாந்தன் போன்றோர் தம் படைப்புகளை அம்மின்னம்பலத்தில் வெளியிட உரிமை கொடுத்துள்ளனர்.
ஈழம், மலேசியா, சிங்கப்பூர் எழுத்தாளரின் நூல்களும் இடம்பெற்றுள.
மின்னம்பல முகவரி: www.tamil.net/projectmadurai
மனிதப் புலமை அனைத்தும் மின்னம்பல தளத்துள் வந்துவிட வேண்டும், எவருடைய ஆக்கமும் எம்மொழியில் இருந்தாலும் அது எந்த மனிதருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த நோக்குடன் இது வரை ஏறத்தாழ 50,000 தலைப்புகளை மின்னம்பல தளத்துள் ஏற்றியுள்ளோர், பங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய எணினி நூலகத்தினர் (Digital Library of India).
பங்களூரில் சி.வி. இராமன் தொடங்கிய இந்திய அறிவியல் நிறுவனத்தின் 20 ஏக்கர் வளாகத்தில் அமைந்த இந்த நூலகம், இந்திய மொழிகளில் உள்ள 20,000க்கும் அதிகமான தலைப்புகளை மின்நூல்களாக்கியுள்ளது.
அமெரிக்காவின் கார்ணகே மெலோன் பல்கலைக்கழகத்துடன் இந்திய எணினி நூலகம் இணைந்து பணிபுரிகிறது. உலக எணினி நூலகத்தை உருவாக்கி, புலமையைப் பகிர்வதே இவர்களின் நோக்கமாகும்.
மின்னம்பல முகவரிகள்: www.dli.ernet.in, www.ulib.org
மின்நூல்கள் உருவான கதை சுவையானது.
அமெரிக்காவில் 1971இல் மயிக்கேல் ஆர்டு என்பவர் பெரிய கணிப்பொறி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அக்காலத்தில் மேசைக் கணிப்பொறிகள் வரவில்லை.
ஓய்வு நேரத்திலும் கணிப்பொறி அருகே இருந்தார்.
அமெரிக்க விடுதலைப் பட்டயத்தைத் தட்டச்சுச் செய்தார். மின்னம்பலத்தில் ஏற்றினார்.
1991இல் குட்டன்பேர்க்கு புள்ளி அமைப்பு மின்னம்பலமாயது. இன்று அந்த மின்னம்பலத்தில் 13,000 நூல்களைப் பார்க்கலாம், படிக்கலாம், இறக்கலாம், அச்செடுக்கலாம்.
மின்னம்பல முகவரி: www.gutenburg.org
மேலே கொடுத்த மின்னம்பல முகவரிகளுள் தமிழ் நூல்களுக்கான மின்னம்பல முகவரி தவிர்ந்த ஏனைய யாவும் அரசின் அல்லது தனியாரின் நிதி பெற்றுச் செயற்படுவன.
தமிழ் நூலுக்கான முகவரிக்கு மட்டும் யாரும் எந்த நிதி உதவியும் அளிப்பதில்லை. எனினும் தன்னார்வத் தொண்டர் பலர் தம் உழைப்பை நல்கித் தமிழை வளர்க்கின்றனர்; தமிழ்ப் புலமையை உலகுக்கு ஈகின்றனர்.

கொழும்பில் மணிமேகலைப் பிரசுரப் புயல்

-மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கொழும்பில் வாழ்ந்த கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஜி எனச் சிலர் சேர்ந்து இலட்சுமண ஐயர் தலைமையில் ஒரு குழுவாகி, சிறீமாவோ அரசு 1971இல் ஆட்சியில், தமிழுக்கும் தமிழருக்கும் நன்மை செய்தே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு செய்த பல பணிகளுள் ஒன்று, தமிழ் நாட்டுக் குப்பைகள் இலங்கைக்குள் வருவதை வெகுவாகக் குறைத்தமை.
இக்குழுவுடன் இணைந்த பலருள் மருத்துவர் இந்திரகுமாரும் ஒருவர். இந்தக் கருத்தோட்டத்துக்குத் தலைமை தாங்கிய பெருமை அக்கால அமைச்சர் குமாரசூரியரைச் சாரும்.
யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தடை செய்வதில் முனைப்பாயிருந்தவருள் இவர்களுட் சிலரும் அடங்குவர்.
கைலாசபதி, சிவத்தம்பி, செ. கணேசலிங்கன், போன்றோரின் நூல் களை அக்காலத்தில் சென்னையில் பல பதிப்பகங்கள் வெளியிட்டு வந்தன. தமிழகத்தில் தமக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிய இவர்கள், தமிழக எழுத்தாளருக்கு இலங்கையில் வாசகர் வட்டம் உருவாகக் கூடாதென்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
அது மட்டுமல்ல தம்மைத் தவிரப் பிற இலங்கை எழுத்தாளர்களுக்குத் தமிழகம் வாசிப்புக் களமாக அமைந்துவிடக் கூடாதென்பதில் மிகக் கவனமாக இருந்தனர். இலங்கை எழுத்தாளர் யாராவது இவர்களிடம் உதவி கேட்டு, தமிழகத்தில் வெளியிட வாய்ப்புக் கேட்கப் போனால் உமக்கென்ன எழுதத் தெரியும் எனக் கேலி செய்து, அவ்வெழுத்தாளரைத் திருப்பி அனுப்பிய செய்திகளையும் சிலோன் விஜயேந்திரன் என்னிடம் அடிக்கடி சொல்வார்.
தன்னலம் நிறைந்த இவர்களின் போக்கை இலங்கைத் தமிழர் ஏற்கவில்லை. 1971இல் இலங்கைத் தமிழ் இளைஞர் பலர் இக்கருத்தோட்டத் துக்கு எதிராகத் திரண்டனர். இக் கருத்தோட் டத்தின் தலைவர், அமைச்சர் குமாரசூரியரைக் கொலை செய்யவும் முயன்றனர். இந்தக் குழுவினர் ஆலவட்டம் பிடித்த சிறீமாவோ அரசின் தமிழர் எதிர்ப்புக் கொள்கையே தமிழ்-சிங்கள உறவு மிகவும் மோசமடையக் காரணமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் கொழும்பில் 2005 மார்ச்சு 3ஆம் நாள் நிகழ்ந்த புத்தக வெளியீட்டு விழாவை நோக்க வேண்டும்.
தமிழகப் பதிப்பகங்களின் வெளியீடுகளைக் குப்பை எனப் பொத்தாம் பொதுவாகக் கூறியவர் பலர், அவை இலங்கைக்குள் வராமலிருக்க முயன்ரோர் பலர் இன்று உயிருடன் இல்லை. சிலர் இன்றும் வாழ்கின்றனர். சிவத்தம்பி கொழும்பில் இருக்கிறார்.
அப்பொழுது அவர்களின் கருத்துக்கு எதிராக இயக்கம் நடத்திய பலருள் நானும் ஒருவன்; சாவகச்சேரியில் வாழ்ந்த அ. பொ. செல்லையாவும் ஒருவர். எங்களது கருத்துகள் அறிவின் வெளிப்பாடாக அமைந்தன. ஈழத் தமிழர் உணர்வைப் பிரதிபலிப் பதாக அமைந்தன.
கைலாசபதி - சிவத்தம்பி - குமாரசூரியர் குழுவினரின் ஆட்சி அதிகாரத்தனத்தை மீறி யாழ்ப்பாணத்தில் 1974இல் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்திய குழுவில் நானும் ஒருவன். அ. பொ. செல்லையா போன்ற ஏராளமான தமிழ் உணர்வாளர் எமக்குப் பின் நின்றனர்.
கைலாசபதி - சிவத்தம்பி குழுவினர் அறியாமையிலும் தன்னல வேட்கையிலும் திளைத்தனர் என அன்று கூறினோம்; இன்றும் அதையே கூறுவோம். இந்தக் குழுவின் எச்ச சொச்சங்கள் இன்று தன்னல நோக்குடன் தமிழ்த் தேசியம் பேசுவது வியப்புக்கு உரியதல்ல.
2005 மார்ச்சு 6ஆம் நாள், கொழும்புத் தமிழ்ச் சங்கப் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி, எம் நிலைப்பாட்டின் உறுதியின் விளைவு; கைலாசபதி - சிவத்தம்பி குழுவினரின் குறுகிய, தன்னலச் சிந்தனைக்கான சாவுமணி ஒலிகளுள் ஒன்று.
கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக மணிமேகலைப் பிரசுரம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தமிழக வாசகர் களத்துக்கு அறிமுகம் செய்து வருகிறது.
சிங்கள அரசின் அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்த ஏராளமான ஈழப் படைப்பாளிகள், தத்தம் படைப்புகளை வெளிக்கொணரத் தமிழகத்தை நாடினர். தமிழகத்திலும் வாழ்ந்த ஈழப் படைப்பாளிகளுக்குப் பதிப்பாளர் பலர் களம் அமைத்துக் கொடுத்து உதவினர்.
ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் மூவாயிரம் தலைப்புகள் வரை கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்திலும் புதுவையிலும் வெளியாகி இருக்கலாம். மூத்த பதிப்பகங்கள் பல ஈழப் படைப்பாளிகளுக்கு ஆதரவு கொடுத்தன.
தம் பதிப்புகளை இலங்கைக்குள் புகவிடாது தடுத்தவர் பலரை அடையாளம் கண்ட பின்பும் அதை உளத்திருத்தாது, நல்ல உள்ளத்துடன் வரவேற்று உமக்கென்ன எழுதத் தெரியும் என ஒரு முறையேனும் வினவாமல், ஈழத் தமிழ் நூல்களை வெளிக்கொணர்ந்த தமிழகப் பதிப்பாளரைப் பாராட்டுவது ஈழத்தவர் கடமை.
கடந்த மார்ச்சு 6ஆம் நாள் கொழும்பில், தமிழ்ச் சங்க மண்டபத்தில் மணிமேகலைப் பிரசுரத்தாரின் 26 தலைப்புகள் வெளியாயின. மணிமேகலைப் பிரசுரத்தாரின் அயரா முயற் சியின் விளைவாக இது வரை இருநூற்றிருபத்தைந்துக்கும் கூடுதலான ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்கள் வெளியாகி உள்ளன.
ஈழத்துப் படைப்பாளிகளுக்குச் சுன்னாகம் தனலக்குமி புத்தகசாலை, கொழும்பு வீரகேசரி நிறுவனம், யாழ்ப்பாணம் வரதர் வெளியீடு போன்று வலுவான ஆதரவு கொடுப்பவர் மணிமேகலைப் பிரசுரத்தினர்.
யாழ்ப்பாணத்துப் பதிப்பு முயற்சிகளை அணுக்கத்தில் இருந்து பார்த்தவன். வரதர் பட்ட துன்பங்ளை நேரில் பார்த்தேன். வீரகேசரி பாலச்சந்திரனின் அயரா உழைப்பைப் பார்த்தேன். சுன்னாகம் தனலக்குமியார் கட்டுக் கட்டாக யாழ்ப்பாணச் சந்தைக்குத் தம் வெளியீடுகளைக் கொண்டு வந்து திரும்பிப் போனதைப் பார்த் தேன்.
தமிழகப் பதிப்பு முயற்சிகளையும் அணுக்கத்தில் இருந்து பார்க்கிறேன். இரு பதிப்புலகங்களின் ஏற்ற இறக்கங்களையும் அறிவேன்.
தமிழகப் பதிப்பாளர் ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தரும் ஆதரவுக்குத் தலை தாழ்த்தி நன்றி கூறுவேன். தமிழகப் புத்தக விற்பனையாளர் ஈழத்தவர் நூல்களை வாங்கி விற்பதில் ஆர்வம் காட்டுவதற்கு, தமிழகத்தில் உள்ள வாசகர் வட்டமே காரணம். வழமைக்கு மாறான உரைநடை என்றாலும் பரவாயில்லை, நல்லனவற்றுக்கு ஆதரவு தருவோம் என்கின்றனர் வாசகர்.
தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு ஈழத்துப் படைப் புகள் சென்றடைகின்றன. சுன்னாகம் தனலக்குமியாரும் வரதரும் வீரகேசரியும் செய்ய முடியாததை நியு செஞ்சுரி, பாரி, வானதி, கழகம், கலைஞன், நர்மதா, தமிழோசை, கண்ணதாசன், காந்தளகம், குமரன், மித்ர செய்து வருகின்றனர்; இப்பணியைக் கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலைப் பிரசுரம் வெகு வேகமாகச் செய்து வருகிறது.
மணிமேகலைப் பிரசுரத்தாரின் அணுகுமுறைகள், வணிக உத்திகள் பற்றிய மாற்றுக் கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். தரமற்ற படைப்புகளுக்கு ஆதரவு தருகின்றனர் என்ற கருத்தும் உண்டு.
மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதை களை முதன்முறையாகத் தமிழ்நாடு கூர்ந்து படிக்கவுள்ளது.
சாவகச்சேரி அ. பொ. செல்லையாவின் வெண்கலக் குரலைக் கேட்டோர், அவரது எழுத்தைத் தெரிந்து கொள்ளவுள்ளனர்.
திருகோணமலையில் காந்தி மாஸ்ரர் செய்த பணிகளைத் தமிழகம் நிமிர்ந்து பார்க்கப் போகிறது.
இணுவில் அநவரத விநாயக மூர்த்தியார் ஈழத்தவருக்குச் சொன்ன செய்திகள் இன்று தமிழகத்தில் கேட்கின்றன.
தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே இந்த இலக்கிய உறவு ஈழத்துப் பூதந்தேவனாருக்கு முன் பிருந்தே தொடர்வதல்லவா?
ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம் நடத்திப் பதிப்பித்தமையும், புதுக்கோட்டை, கரூர் போன்ற பல இடங்களில் ஈழத்தவர் பதிப்பகங்கள் நடத்திய வரலாறும் உண்டல்லவா?
முத்துத்தம்பிப்பிள்ளை சென்னை பந்தர் தெருவில் அச்சகம் நடத்திப் பதிப்பித்ததும் அகராதி அச்சிட்டதும், அந்த அகராதியே இன்று ஆசிரியர் பெயரில்லாமல் தமிழ் உலகெங்கும் அமோகமாக விற்கும் பெரிய அகராதி எனவும் அன்பர் இமானுவேல் பிள்ளை கூறக் கேட்டேன்.
ஈழத்தவர் படைப்புகள் அங்கேயே முடங்காமல் பரந்த சந்தைக் குள் புகுந்து, பரந்த வாசகர் வட்டத்தைப் பெற்றுப் பயன்பெற வேண்டியே சென்னையில் காந்தளகம் தொடங்கினேன். 1980 தொடங்கி இன்று வரை 25 ஆண்டுகள் தளராமல் பணி புரிகிறேன்.
எனக்குப் பின், குமரன் செ. கணேசலிங்கன், பார்க்கர் வே. கரு ணாநிதி, மித்ர எஸ்.பொ., என்னிடம் பயின்ற மாசறு ஜெயராசசிங்கம் ஆகிய ஈழத்தவர் பதிப்பகங்களைத் தொடங்கி நடத்துகின்றனர்; முயன்று பணி புரிகின்றனர்.
புத்தகச் சந்தையின் சுளிவு நெளிவுகளைத் தெரிந்த மணிமேகலைப் பிரசுரம் போல, ஆண்டுக்கு நூறு என ஈழத்துத் தலைப்புகளைத் தமிழகத்தில் உள்ள ஈழத்தவரின் பதிப்பகங் களால் வெளிக்கொணர முடியவில்லை.
ஏனைய தமிழகப் பதிப்பகத்தார் எவரும் மணிமேகலையார் காட் டும் அதே அளவு ஆர்வத்தை ஈழத்துப் படைப்பாளிகள் மீது காட்டுவதில்லை.
மணிமேகலைப் பிரசுரத்தார் முன்பு 22 தலைப்புகளை வெளிட்டனர். சில திங்களுள் மீண்டும் கொழும்பு சென்று 26 தலைப்புகளை வெளியிட்டுளர். இவை வரலாற்றுப் பதிவுகள். ஏனெனில் இதுவரை எந்தத் தமிழகப் பதிப்பாளரும் இப்படியான விழாக்களை இலங்கையில் நிகழ்த்தவில்லை.
2005 மே 15ஆம் நாள் இதையொத்த வெளியீட்டு விழாவை மணிமேகலைப் பிரசுரத்தார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடத்த உள்ளனர் என்பது ஈழத்துப் படைப்புலகத்துதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.
கவிதைத் துறையில் காசி ஆனந்தன் போல, திரைத்துறையில் பாலு மகேந்திரா, வி. சி. குகநாதன், சிலோன் விஜயேந்திரன், இன்றைய ஜெய் ஆகாஷ் போல, சிறுகதை, நாவல் எழுத்துகளில், கட்டுரை இலக்கியத்தில் ஈழத்தவர் மிளிரும் காலம் வரவேண்டும்; தமிழகப் பதிப்பாளரின் ஆதரவின்றி இந்தச் சாதனை நிகழக் கூடியதல்ல.
சிலோன் விஜயேந்திரன் நடிப்புத் தொழிலை விட்டு எழுத்துத் துறைக்கு முழுமூச்சாக வந்தார். மூத்த பதிப்பகங்கள் ஆதரவு கொடுத்தன. கழகம், பாரி, மணிவாசகர், அல்லயன்ஸ், கண்ணதாசன், கலைஞன் என அவருக்குப் பலர் ஆதரவு கொடுத்தனர்.
விபத்தில் தீக்காயங்களுடன் இறந்த செய்தி கேட்டதும் இப்பதிப் பகத்தார் ஒவ்வொருவரும் வந்து அவரது உடலுக்கு மரியாதை செய்தனர்; ஈமச் சடங்குச் செலவுகளை ஏற்றனர்; நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஈழத்தவர் என்றாலே காமாலைக் கண்ணுடன் பார்க்கக் கூடிய தமிழகச் சூழ்நிலையிலும் (இராஜீவ் கொலை விசாரணை தொடர்பாகச் சைதாப்பேட்டைச் சிறையில் ஓராண்டைக் கழித்தவர் சிலோன் விஜயேந்திரன்) தரமான எழுத்துக்கும் படைப் புக்கும் அணுகு முறைக்கும் தமிழகப் பதிப்பாளர் தரும் ஆதரவு போற்றுதற்குரியது.
மணிமேகலைப் பிரசுரத்தார் ஈழத்தவர் படைப்புகளை வெளிக் கொணரும் வேகத்தைப் பாராட்டுகிறேன். அவற்றைத் தமிழக, புது வைச் சந்தையில் பரப்பும் உத்தியைப் போற்றுகிறேன். உலகெங்கும் 15 நாடுகளுக்குச் சென்று ஈழத்துப் படைப்பாளிகளின் புத்தகக் காட்சி களை நடத்தும் பணியை வேறு எந்தப் பதிப்பகத்தாரும் செய்வதில்லை.
மணிமேகலைப் பிரசுரம் கொழும்பில் நடத்திய 26 நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோர் கூறிய கருத்துரைகளையும் மாற்றுக் கருத்துக் கூறுவோரின் உளப்பாங்கையும் ரவி தமிழ்வாணன் கருத்தில் கொள்வார்; தரமான, தவறுகள் குறைவான ஈழத்துப் படைப்புகளை வெளியிடுவார்.
ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகத்தில் பல பரிசுகளைப் பெறுவதற்கு மணிமேகலைப் பிரசுரமும் பிற பதிப்பாளரும் காரணமாக இருந்துளர். இப் பதிப்பாளர் மூலம் உலகப் பரிசுகள் பெறும் காலம் ஈழத்துப் படைப்பாளிகளுக்கு நிச்சயம் வரும்.

தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி

- கவிஞர் அண்ணாகண்ணன்
பதிப்புத் தொழில் உலகம்
எப்படி ஒருவர் மெய்ப்பாளர் ஆவது? இதை முறைப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படிக் கற்பதன் தேவை என்ன? எங்கே கற்பது? மாணவர் ஆவ தற்கு என்ன தகுதி? அதற்கான பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடியவை என்னென்ன? எவ்வளவு நாள்கள் பயிற்சி? எங்கெல்லாம் இந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இதற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?.... எனப் பலவற்றை மிக நுணுக்கமாகக் காட்டும் ஒரு திட்ட வரைவு.
பாடத் திட்டத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெற வேண்டும் என்ற விவரம் அத்திட்டத்தில் இருந்தது. ஒரு கருவை முழுமையாக அணுகுவதற்கு இஃது ஒரு சிறந்த சான்று. இந்தத் திட்டவரைவில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுமாறும் அவர் வேண்டியுள்ளார்.
தமிழ்ப் பதிப்புலகும் இதழுலகும் இணைய உலகும் வளர்ந்து வரும் இந்நாளில் மெய்ப்பாளர் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையை இது தொடர்புடைய துறையினர் உணராமல் இருப்பதால் மெய்ப்பின் தேவை, மிக மிக அதிகரித்துவிட்டது.
இவர்களுள் இரண்டு வகைகள் உண்டு. 1. மூலப் படி எப்படி இருக்கிறதோ அப்படியே, தட்டச்சு ஆன பிறகு உள்ள படியில் உள்ளதா எனப் பார்ப்போர் ஒரு வகை. 2.மூலப் படியிலேயே தவறு இருந்தால் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பி, மூலத்தை எழுதியவரிடம் விளக்கி, பிழை திருத்துவோர் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரைக் காண்பது மிக அரிது.
சிறப்பான மெய்ப்பாளர்கள் அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவுக்கு அருகிவிட்டார்கள். அதிலும் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இன்னும் அதிகம். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றை எங்கெங்கே இடவேண்டும் என்பது குறித்து மெய்ப்பாளர் பலரும் கருத்து மாறுபடுகிறார்கள். இடைவெளி இடும் இடங்களில்கூட இந்த அல்லாட்டம் உண்டு. ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகளை இடுவதிலும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எங்கு பந்தி பிரிப்பது என்பதும் இறுதியானதில்லை.
வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதிலும் இத்தகைய மாறுபாடு உண்டு. வடசொற்களைத் தமிழில் எழுதும் முறையிலும் ஒத்த கருத்து கிடையாது.
கருப்பு/ கறுப்பு, கோயில்/ கோவில், பவளம்/ பவழம் எனப் பல சொற்கள் தமிழில் புழங்குகின்றன. இவற்றில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே சரிதான் என்போர் பலர். இப்படித்தான் எழுதவேண்டும் என ஒன்றை மட்டும் சொல்லுவோர் சிலர்.
பிழை, எப்பொழுதுமே நம்மை வீழ்த்துவதற்குக் காத்திருக்கும் ஒரு புலி போலத்தான். 700 பக்கங்கள் உள்ள ஒரு நூலினைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மெய்ப்புப் பார்த்தாலும் கடைசியில் அச்சான பிறகு 70 பிழைகளாவது இருக்கும். பிழை திருத்தம் எனக் கடைசிப் பக்கத்தில் சிலர் இடுவதுண்டு. சில நேரங்களில் அந்தப் பிழை திருத்தத்திலேயே பிழை இருக்கும்.
பிழையை மாயமான் என்றும் சொல்லலாம். பிழை என நினைக்கும் இடத்தில் பிழை இருக்காது. பிழை இல்லை என எண்ணும் இடத்தில் பிழை வந்து நிற்கும்.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பலர் பிழையையே சரியென எண்ணிக்கொண்டு அதையே ஆணித்தரமாக எழுதி வருகின்றனர். இப் படி இருப்பவர்களைத் திருத்தமுடியாது! ஆனால், தாம் எழுதுவதில் பிழை இருக் கலாம் என்ற ஐயம், பிழை எனச் சுட்டிக் காட்டுவதைத் திருத்தும் இயல்பு, பிழை வரக் கூடாது என்ற அடிப்படை எண்ணம், இவ்விள்ளத்தினர் தங்களைச் சிறப் பாக வளர்த்துக்கொள்ள முடியும்.
சில எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறேன்.
புகழ்பெற்ற வார இதழில் துணை ஆசிரியராகப் பணி யாற்றிய காலம்; முதல் நாள் ஒரு புதினம் அச்சுக்குப் போகத் தயாராய் இருந்தது. புதிதாய் வந்திருந்த என்னிடம் அதன் இறுதிப் படியைக் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார்கள். அந்த நூறு பக்கப் படியை நான் பார்த்து முடித்தபோது சராசரியாகப் பக்கத்திற்கு 20 பிழைகள் இருந்தன. அவற்றைப் பக்க ஓரங்களில் குறித்தேன். தட்டச்சு செய்தவரும் அங்கிருந்த மெய்ப்பாளரும் என்னைச் சினத்தோடு பார்த்தார்கள். நீங்க ரொம்ப க்,ச்,ப் போடுறீங்க என்றும் பக்கத்தை என்ன இப்படிக் குதறி வச்சிருக்கீங்க? என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்கள். இப்படியெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் இது இன்றைக்கு அச்சுக்குப் போகாது. சரியான நேரத்தில் அச்சுக்குப் போகாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிடுவோம் என அச்சுறுத்தவும் செய்தார்கள்.
அதன் பிறகு, மெய்ப்புத் திருத்தக் கையேட்டினை அலுவலகம் எனக்கு அளித்தது. அதில் பல வழிகாட்டுதல் கள். மனத்தை என எழுதினால் எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாமரர்கள் சிரமப்படுவார்கள்; எனவே மனதை என எழுதினால் போதும் என்பது போன்ற பல விதிகள் அதில் இருந்தன.
நான் ஒரு நாளிதழில் பணியாற்றிய காலம்; ஒரு செய்தி மெய்ப்புப் பிரிவுக்கு வந்தது. சொல், வாக்கிய அமைப்பு, பந்தி, முன்பின் நிரல் என எதுவுமே சரியில்லை. நான் அதை முற்றிலும் மாற்றி, முறையாக எழுதி, தட்டச்சுக்கு அனுப்பினேன். அடுத்த நாள், மதுரையில் இருந்த தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்புக்கு மேல் அழைப்பாய் வந்துகொண்டிருந்தது. யார் மெய்ப்புப் பார்த்தது? எனத் தேடினார்கள். நான் மாற்றித் திருத்தி எழுதிய படியைக் கைவிட்டு, முன்னம் இருந்தவாறே தட்டச்சாளர் பக்கமாக்கினார். பிழை திருத்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அதனால் இதழின் பெயர் கெட் டது; தட்டச்சருக்குத் தண்டம் விதித்தனர். நான் திருத்திய படியைப் படித்த செய்தி ஆசிரியர், மிகவும் பாராட்டினார்.
இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் மெய்ப்புப் பார்ப் பது, மிகவும் பொறுப்பாகச் செய்யவேண்டிய வேலை. வார இதழில் ஒருமுறை அவன் வசதியோடு வாழ்ந்தான் என வந்த இடத்தில், அவன் வசந்தியோடு வாழ்ந்தான் என வந்துவிட்டது. பொருளே மாறிவிட்டது.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், எழுத்தை விட எண்தான் மிகவும் சிக்கலானது.
முழுக்க முழுக்க எண்கள் கொண்ட குலுக்கல் சீட்டு முடிவு, தேர்வு முடிவுகளில் ஓர் எண் தப்பானாலும் போச்சு. பரிசு விழாதவர்க்கு விழுந்ததாகவோ, விழுந் தவர்க்கு விழாததாகவோ அச்சானால் என்னாவது? தேர் வான மாணவர் ஒருவரின் எண் விடுபட்டால் என்னாவது? தோல்வியடைந்தவரின் எண் வெற்றிபெற்றதாக வந்து விட்டால் என்னாவது? மெய்ப்புப் பார்த்தவர் தீர்ந்தார்.
மூலத்தை ஒருவர் வாசிக்க, இன்னொருவர் திருத்தம் பார்க்கவேண்டும் என்பது மெய்ப்பின் பொதுவிதி. ஆள் பற்றாக்குறை காரணமாக இது, பெரும்பாலும் நடக்காது. ஒருவரே பார்க்கவேண்டியிருக்கும். இருவர் இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். ஒருவர் உட்காரும்போது, இன்னொருவர், தேநீர் குடிக்கச் சென்றுவிடுவார். அவர் திரும்பி வரும்போது, முன்னவர், தொலைபேசியில் மும்முரமாய் இருப்பார். வேறு எதற்குப் பார்க்கிறார்களோ இல்லையோ, எண்கள் வெளிவரும் போது மட்டும் இருவர் பார்க்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.
இதழ்களின் மெய்ப்பாளர் அந்த இதழின் தேதி, சரியானபடி இருக்கிறதா? இதழின் பக்கங்கள் முறையாக, எண் வரிசைப்படி இருக்கின்றனவா? எனப் பார்க்க வேண்டும்.
அதுபோன்றே பூச்சியங்கள்கூட நம்மைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். பத்து இலட்சம் என்ற எண்ணைக் குறிக்கும்போது ஒரு பூச்சியம் குறைந்தா லும் அதிகமானாலும் சிக்கல்தான். தொகை யே மாறிவிடும். இந் த எண் சிக்கலைத் தவிர்க்க, 10 இலட் சம் எனப் பாதி எண் ணும் பாதி எழுத்து மாக எழுதிச் சமா ளிப்பவர் உண்டு.
இதழாளர் வேலை தேடி வரும் பலருக்கும் முதலில் மெய்ப்புப் பார்க்கும் வேலை கொடுப்பர். அவர்கள் அதில் ஓரளவு தேறினால்தான் அடுத்து, செய்தியாளர் பணி. அதில் ஏதும் தவறு நடந்தால் அவர் வேலை காலி. தட்டச்சு செய்தவர், உதவி ஆசிரியர், ஆசிரியர் எனப் பலரைக் கடந்துதான் ஓர் இதழ் அச்சுக்குப் போகிறது. அதில் தவறு நடந்தால் ஆசிரியர், உதவி ஆசிரியரைப் பார்ப்பார். உதவி ஆசிரியர், மெய்ப்பாளரைப் பார்ப்பார். மெய்ப்பாளர், தட்டச்சாளரைப் பார்ப்பார். தட்டச்சாளர், தப்பைச் சரிபண்ணத்தானே நீங்க இருக்கீங்க? என மெய்ப்பாளர் மேல் பழியைப் போட்டுவிடுவார். பெரிய தவறு இல்லாமல் என்றுகூட சொல்ல முடியாது; கண்டுபிடிக்கப் படாமல் இருக்கும்வரை மெய்ப்பாளர் பிழைத்தார்.
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இன்று பலரும் மெய்ப்பாளர் பணியாற்றுகிறார்கள். தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டும் பலரும் இருக்கிறார்கள். அண்மையில் பதிப்பாசிரியர் ஒருவரின் கட்டுரையில் காரி உமிழ்ந்தான் என்ற வரி இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி, சரியா? என வினவி னேன். சரிதான் என்றார். காறி உமிழ்ந்தான் என்றுதானே வரவேண்டும்? என்றேன். கொஞ்சம் யோசித்துவிட்டு, காரிதான் சரி; நான் அப்படித்தான் எழுதுவேன் என்றார்.
அடுத்து, ஓரிடத்தில் அரைகுறைக்கு அறைகுறை என்ற சொல் வந்திருந்தது. ஒரு பழைய நூலில் அறைகுறை என இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே அகராதியை எடுத் துப் பார்த்தேன். அறைகுறை என்றால் அறுத்தலும் குறைத் தலும் எனப் பொருள் இட்டிருந்தது. அறைகுைறக் காரரிடம் அதை எடுத்துக் காட்டினேன். அந்த அகராதியே தவறு என்றார்.
வாழ்த்துக்கள் என எழுதுவோர் இன்னும் பலர். க் வராது என்று சொன்னால், கேட்பதில்லை. பல ஆண்டு களாக இப்படித்தான் எழுதி வருகிறோம். இப்பொழுது வந்து விதியை மாற்றாதீர்கள் என எரிந்து விழுவார்கள்.
கண் செருகும்போது, பசிக்கும்போது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, வானொலி கேட்டுக்கொண்டே, பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டே மெய்ப்புப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அதுபோல் அச்செழுத்து, கருப்பாய் இருந்தால் நீலம்/ சிவப்பு/ பச்சை என வேறு வண்ண எழுதுகோலால்தான் திருத்தத்தைக் குறிக்கவேண்டும்.
இவை போன்று நிறைய விதிமுறைகளைப் பின்பற் றினால்தான் ஓரளவுக்காவது மெய்ப்பு சிறக்கும். இவை குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத் தருவர் என எதிர்பார்க்கலாம்.
வருவாய் மிகக் குறைவு என்பதால் இந்தத் துறை வளர வில்லை. பக்கத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம் என்ற நிலை. ஐந்து ரூபாய் கொடுத்தால் தொழிலில் ஆர்வம் வருமல்லவா?
இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்விதம் மெய்ப்புப் பார்ப்பது என்பதில் இன்னும் பொதுக் கருத்து உருவாக வில்லை. முதலில் இதுவே பெரிய சவால்தான். தமி ழில் இதுவரை மெய்ப்பை மட் டுமே மையப் பாட மாகக் கொண்டு ஒரு பட்டயப் படிப்பு என்ற சிந்தனையே புதுமையானது.
இதனை இணையதளத்தில் ஒரு செய்முறைப் பாடமாக அளித்தால் மிகவும் பயன்படும். எந்தச் சொல்/வாக்கிய அமைப்பு சரி எனச் சொல்வதற்கும் இந்தத் தளம் பயன்படும். அது குறித்துக் கேள்வி எழுப்பவும் பதில் அளிக்கவும் நிபுணர் குழு இயங்கவேண்டும். ஆயினும் இவை அனைத்திற்கும் நிதி முதற்கொண்டு செயலாக்கம் வரையில் பலரின் உதவி தேவை. ஆர்வம் உள்ளவர்கள் உதவுமாறு அவர் வேண்டியுள்ளார். இந்த நல்ல முயற்சி வெற்றியடைய நம்மால் முடிந்தவரை உதவுவோம்.
இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அடுத்து இன்னும் பலவற்றுக்கும் பயிற்சி அளிக்கலாம்.
1. தமிழை உச்சரிப்பதற்கும் தெளிவாகப் பேசுவதற்குமான பயிற்சி
2. பதிப்பாசிரியர் பயிற்சி
3. திறனாய்வாளர் பயிற்சி
போன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கவேண்டிய தேவையும் நம் சமூகத்தில் உள்ளது. அவற்றைப் படிப் படியாகச் செயலாக்கலாம்.
இந்தக் கடினமான, சிக்கலான கருவை எடுத்துக் கொண்டு கற்றுத் தருவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் முன்வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Saturday, September 24, 2005

தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர்காலம்

எழுதுகிறார்கள் என்பதால் வாசிக்கிறார்கள். இந்த எழுத்தாளருக்கும் (1) வாசகருக்கும் (2) பாலமாகப் பதிப்பாளர் (3), விற்பனையாளர் (4), நூலகர் (5) ஆகிய இந்த ஐவருமே தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் தூண்கள்.
மக்கள் தொகை பெருகப் பெருக, எழுத்தாளர், வாசகர் தொகையும் பெருகும். 1901இல் 1.5கோடி, 1951இல் 3.5 கோடி, 2001இல் 7 கோடி, 2020இல் 9 கோடி, 2050இல் 11 கோடி எனத் தமிழர் தொகை (ஆதாரம் ஐ.நா. உலக வங்கி மற்றும் இந்திய அரசு வெளியீடுகள்) பெருகி வருகிறது.
1901இல் தமிழகம், ஈழம், மலாயா, பர்மா, பிஜி, மொரிசியசு, சீசெல்சு, தென் ஆபிரிக்கா, இறியூனியன், சுரினாம் ஆகிய 10 நாடுகளில் மட்டும் தமிழர் வாழ்ந்தனர். 1951 வரை இந்த நிலை நீடித்தது. அதன் பின்னர் படிப்படியாக, இந்திய மாநிலங்கள், கிழக்கு ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா-பசிபிக் பகுதிகளுக்குத் தமிழர் பரவினர். இன்று தமிழரின் வாழ்விடப் பரப்பு உலகெங்குமுள்ள 40 நாடுகளுக்குச் சற்றே அதிகமாகும்.
தமிழரிடையே எழுத்தறிவு, 1901இல் 5%க்கும் குறைவு. 1951இல் 15%, 2001இல் 73%, 2020இல் 99%, 2050இல் 99% எனப் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.
தமிழரின் மக்கள் தொகை, வாழ்விடப் பரம்பல், எழுத்தறிவு யாவும் பெருக்க ஏற்றமாக வளர்ந்துள்ளமையால், எழுத்தாளர், வாசகர் தொகையையும் அதே விகிதத்தில் பெருக்கி உள்ளமை கண்கூடு.
பாலமாக அமையும் பதிப்பாளர், விற்பனையாளர், நூலகர் எண்ணிக்கைகள் 1901 - 2000 காலப் பகுதியில் இந்த வேகத்தில் வளரவில்லை என்பதும் கண்கூடு.
1557இல் தம்பிரான் வணக்கம் பதிப்புடன் தொடங்கிய அச்சு, தாள் சார்ந்த பதிப்புத் துறை, சமய, இலக்கிய, புனைகதை நூல்களாக 1901வரை பல தலைப்புகளைக் கண்டது. பல சிறந்த பதிப்பாளர்களையும் கண்டது. சிறந்த அடித்தளமாக இப்பதிப்பாளர் (திருவிவிலியச் சங்கம், ஆறுமுக நாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை, கிறித்துவ இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை போன்ற அமைப்புகளும் தனியார் பலருமாக) முயற்சிகள் அமைந்தன. 5% எழுத்தறிவுள்ளோர் வாழ்ந்த அந்தக் காலத்திலேயே தலைப்புக்கு 1,000 படிகள் அச்சாகிய வரலாறும் உண்டு. ஒரே தலைப்பு மறுபதிப்புகளைக் கண்ட வரலாறும் உண்டு.
1901 -2000 காலப்பகுதியில் பதிப்பாளர் தொகை வளர்ச்சி கணிசமாகியது. 2,100 பதிப்பாளர் இன்று (மதிப்பீடு காந்தளகம், சென்னை) உலகெங்கும் தமிழ்த் தலைப்புகளைப் பதிப்பிக்கின்றனர். இவர்களுள் 70க்கும் சற்றே அதிகமான எண்ணிக்கையில் (படம் மேலே) முன்னணியில் உள்ளனர்.
தமிழில் பாடநூல் தலைப்புகளை வாங்கி விற்பனை செய்வோர் எண்ணிக்கை தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகம். எழுத்தறிவு பெற்றோர் வளர்ந்த அதே வேகத்தில் பாடநூல் விற்பனையாளரும் வளர்ந்தனர் என்றே சொல்லலாம்.
பாடநூல் அல்லாத தமிழ்த் தலைப்புகளை வாங்கி விற்பனை செய்ய முழுமுயற்சியில் 100 நூறு விற்பனை நிலையங்கள் வரை தமிழகத்தில் இருக்கலாம் என அகிலன் கண்ணன் (பதிப்பும் படிப்பும் (2002), பக். 97) மதிப்பிடுகிறார். அனைத்துத் தமிழ்த் தலைப்புகளையும் ஒரே கூரையின் கீழ் விற்கும் விற்பனையாளர் 1999 வரை எவரும் இருக்கவில்லை. எனினும், யாழ்ப்பாணம், மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, திருவாரூர், கும்பகோணம், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள சில தமிழ் நூல் விற்பனையாளர் அதிக விற்பனையிலிலுள்ள அனைத்துத் தலைப்புகளையும் காட்சியில் வைத்திருந்தமையே வாசகருக்குப் பெரும் பேறாக இருந்தது.
1901 - 2000 காலப் பகுதியில் தமிழகத்திலும் ஈழத்திலும் நூலகங்கள் அரும்பணி செய்து வந்துள்ளன. சிறப்பாக 1950களுக்குப் பின்னர், தமிழகத்தில் நூலகங்களின் எண்ணிக்கை தாவி வளர்ந்தது. ஈழத்திலும் அதே வேகத்துடன் அவை வளர்ந்தன.
தமிழகத்தில் 2,457 அரசு நூலகங்கள் உள்ளதாக அகிலன் கண்ணன் (பதிப்பும் படிப்பும் (2002), பக். 95) மதிப்பிடுகிறார். 12,400க்கும் அதிக எண்ணிக்கையில் ஊராட்சி அமைப்புகள் உள்ள தமிழகத்தில், 2,457 என்ற எண்ணிக்கை போதுமானதல்ல. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, 2,000ஆம் ஆண்டில் 12,400 அளவில் திருவள்ளுவர் படிப்பகங்களை, நூலகக் கருக்களாக அமைக்க முயன்றது. ஓரளவே வெற்றி பெற்றது.
1980க்குப் பின்னர், ஈழத்தில், போரால் நூலகங்கள் (யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட) பல அழிந்தன. எனினும், நூலகங்களுக்கான தமிழ்த் தலைப்புகளின் கொள்வனவுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறையவில்லை.
சிங்கப்பூர் நூலகங்கள், தமிழ்த் தலைப்புகளை 1968 தொடக்கம் வாங்கத் தொடங்கின. தமிழ்த் தலைப்புகளை 1985-2000 காலப் பகுதியில் ஐரோப்பிய, வடஅமெரிக்க, ஆஸ்திரேலிய நூலகங்கள் அங்கு புலம் பெயர்ந்த தமிழருக்காக வாங்கத் தொடங்கிவிட்டன.
கல்வி நிலைய நூலகங்கள் தமிழகம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு ஆகிய நாடுகளில் தமிழ்த் தலைப்புகளை வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆங்கில மற்றும் பிறமொழித் தலைப்புகளுக்காக ஒதுக்கும் நிதி அளவே அனைத்துக் கல்வி நிலைய நூலகங்களிலும் அதிகம்.
தமிழ்த் தலைப்புகளை விலைகொடுத்து வாங்குவதில் தமிழ் வாசகர் ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்தைத் தமிழ் நூல் பதிப்பாளரும் விற்பனையாளரும் சொல்வதுண்டு. தமிழ் வாசகருக்கு வாசிப்பு நாட்டமில்லை என்றோ, விலை கொடுத்து வாங்கும் ஆர்வம் இல்லை என்றோ சொல்வது தவறு. 1951க்குப் பின் நிகழ்ந்த தமிழிதழ் விற்பனைச் சாதனைகளும், சிற்றூர்கள் தோறும் ஊடுருவி விற்பனையைப் போட்டி போட்டுப் பெருக்கிய தமிழிதழ் வெளியீட்டாளர்களும், வாங்கித் தமிழிதழ்த் துறையை ஊக்குவித்த உலகெங்கும் வாழ் தமிழரும் இக்கூற்றைப் பொய்யாக்குவர்.
இந்தப் பின்னணியில், தமிழ்ப் பதிப்புத் துறையின் எதிர் காலத்தை நோக்க விழைகின்றேன்.
தமிழ்த் தலைப்புகளை வாங்குவோர் தரும் விலையே தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பொருண்மிய அடித்தளம். 2001 க்குபின் உலகெங்கும் நுகர்ச்சிப் பொருளாதாரத்தை நோக்கியே திட்டமிடப்படுகிறது. தொழில் நுட்ப உள்ளீட்டையும், பெறுபேறான உற்பத்தி வளர்ச்சியையும் தாங்குவோர் நுகர்வோரே. எனவே நுகர்வோரிடம் வாங்கும் சக்தி இருக்குமாறு பொருண்மிய விற்பன்னர்கள் திட்டமிடுகிறார்கள்.
சஹாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் மட்டும் மந்த கதி வளர்ச்சி இருக்கும். ஏனைய நாடுகள் அனைத்தில் வாழும் மக்கள் இன்னம் 20ஆண்டுகளுள் எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ்வர் என்பதே கணிப்பு. இன்று உலக மக்களுள் 56% மட்டுமே உயர் வருவாய் உள்ளராயுளர். இந்த நிலை மாறி உலகின் 70% மக்கள் 2020இல் எல்லாரும் எல்லாமும் பெற்று வாழ்வர் என்பதே கணிப்பு (உலக வங்கி நிலவரை, 2003).
வருவாயைச் சொத்துக்காக(1), சேமிப்புக்காக(2), நுகர்ச்சிக்காக(3) என மக்கள் ஒதுக்குவர். நுகர்ச்சிக்காக ஒதுக்கும் தொகையில், தமிழர் தம் தாய் மொழியில் நூல்களை வாங்க எவ்வளவு ஒதுக்கப் போகிறார்கள் என்பதைக் கொண்டே பாடநூல் தவிர்ந்த தமிழ் நூல் பதிப்புத் தொழிலின் வளர்ச்சியைக் கணிக்கலாம்.
தமிழ்த் தலைப்புகள் நுகர்வோரைத் தேடிப் போகாவிடின், தமிழர் நூல்களை வாங்குகிறார்களில்லையே எனக் குறை கூறமுடியாது. கையில் பணம் இருக்கும் வேளையில் தமிழ்நூல் விற்பனைக்கு இருக்கிறது என்ற கவனம் நுகர்வோருக்கு வரவேண்டும். அவரிடமுள்ள அப்பணத்தைத் தம் வசமாக்கப் போட்டி போடும் பல நுகர்ச்சிப் பொருள்களிடமிருந்து அவரை விடுவித்து, தமிழ்நூல் பால் ஈர்த்து, தமிழ் நூலை அவர் கைகளுள் திணிக்கக் கூடிய விற்பனைத் திறனும் சாதுரியமும் தமிழ் நூல் விற்பனையாளருக்கு இருந்தால்தான் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு எதிர்காலமேயுண்டு.
தமிழ் நூல் என்ற கூரையைத் தாங்கும் ஐந்து தூண்களுள், வாசகர் தவிர்ந்த நான்கு தூண்களும் எவ்வாறு தத்தம் பங்களிப்பை நல்கலாமெனப் பார்ப்போம்.
படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுமாறு எழுத்தாளர் எழுதுவதே அவரது எழுத்தைப் பெறுமதியுள்ளதாக்கும். சொல்லும் பொருளும் வாசகருக்குப் பயன்(?) தரவேண்டும். வாசகர் கொடுக்கும் விலைக்குப் பெறுமதியாக மட்டுமல்ல அவரை வளமான உறுதியான எதிர்காலத்துக்கு அழைக்கவும் வேண்டும்.
பதிப்பாளர் பங்களிப்பே முக்கியமானது. ஆள் பாதி ஆடை பாதி என்பர். நல்ல எழுத்தை நல்ல பதிப்பாக மாற்றும் தொழில்திறன் பதிப்பாளருக்கு வேண்டும். தாளும் அச்சும், கட்டமைப்பும் புத்தம் புதுத் தொழில்நுட்பங்களைக் குவித்துக் கொண்டு வருகின்றன. இவற்றை உடனுக்குடன் உள்வாங்காவிடின் வாசகரின் விடாய் வேறுபக்கம் திரும்பிவிடும். பதிப்புத் தரமில்லாத தமிழ் நூலுக்கு விற்பனை வாய்ப்பிருக்காது.
தமிழ்த் தலைப்புகளின் மூலங்கள் எழுத்தாளரை விட்டு வெளியெறியதும் பதிப்பாசிரியர் குழுவிடம் போகாவிடில் அந்த நூல் முழுமை பெறாது. தமிழ்ப் பதிப்பகங்கள் தனியாகப் பதிப்பாசிரியரைப் பணிகொள்வதில்லை. இது பெரும் குறையாகும். எழுத்தாளரின் எண்ண ஓட்டங்களை வாசகரின் எண்ண ஓட்டங்களுடன் இணைப்பவரே பதிப்பாசிரியர். பதிப்பாளரே பதிப்பாசிரியரானால் அந்த நூலில் பதிப்புத் தேவைப் பாதிப்புகளேயிருக்குமன்றி வாசகர் தேவைப் பாதிப்புகளிருக்காது.
2011 - 2051 காலப்பகுதியில் தமிழ்ப் பதிப்பாளரின் மொத்த எண்ணிக்கை பெருகவேண்டும். எழுத்தாளர் தனக்கேற்ற பதிப்பாளரைத் தேர்வுசெய்ய இப்பெருக்கம் உதவும். எழுத்தாளரே பதிப்பாளராவதை மாற்றும். எழுத்தாளருக்கு அண்மித்தவராகப் பதிப்பாளர் இருப்பது போல், விற்பனையாளருக்கு அண்மித்தவராகவும் பதிப்பாளர் இருப்பார். இப்பொழுது 2,100 அளவாக இருக்கும் எண்ணிக்கை, மூன்ற அல்லது நான்கு மடங்காகப் பெருகினால் அடுத்த 20 - 50 ஆண்டுகளின் தமிழ்நூல் பதிப்புத் தேவைகளை நிறைவு செய்யலாம்.
40க்கும் அகிகமான நாடுகளில் 11 கோடித் தமிழர் வாழப் போகும் எதிர்காலத்துக்கு விற்பனையாளர் தொகை மிகக் குறைவே. மின்னம்பலம் வழி விற்பனை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்தாலும், புத்தக் கடையில் நேரில் ஒரு நூலைப் பார்த்து வாங்கும் மன நிறைவு வாசகரின் இயல்பு.
பூமியின் ஒவ்வவொரு கண்டத்திலும் எத்தனை நாடுகளில் இருந்து காந்தளக மின்னம்பலத் தளமான தமிழ்நூல்.கொம் தளத்துக்குள் வாடிக்கையாளர் வருகின்றனர் என்பதைக் கீழுள்ள முதலாவது வரைபடத்தில் காணலாம். எந்த நாடுகளில் தமிழ்நூல்.கொம் உள்ளவர் எவ்வெவ்ளவு கொள்வனவு செய்கின்றனர் என்பதைக் கீழுள்ள இரண்டாவது வரை படத்தில் காணலாம்.
தமிழ்நூல் வாசகரின் பரப்பளவு எதிர்காலத்தில் பரந்தளவினதாக இருக்கும் என்பதற்கு இந்தத் தகவல் (தொகுப்பு: ந. சசிரேகா) எடுத்துக் காட்டு.
இத்துணை எண்ணிக்கையுள்ள நாடுகள், இத்துணை எண்ணிக்கையுள்ள நுகர்ச்சிப் பரப்பு - இதுதான் தமிழ்ப்பதிப்புதச் துறைக்குரிய வளமான எதிர்காலம். இத்தனை வாடிக்கையாளரையும் சென்றடையக் கூடியதாக, விற்பனை வலைப்பின்னல் (இதழியழ் வெளியீட்டாளர் தமிழகமெங்கும் உருவாக்கியது போல்) ஒன்றை உருவாக்காவிடின் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு எதிர்காலம் என்று ஒன்றைக் கனவு காணலாமா?
மின்வணிகம் தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கும். அமெரிக்காவின் புத்தக மின்வணிக முன்னோடியான அமேசன்.கொம் தளத்தினர் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை இழப்பிலேயே இயங்கி வருகின்றனர். இதனால் புத்தகம் தவிர்ந்த வேறு பொருள்களையும் தம் தளத்துக்குள் சேர்த்துள்ளனர்.
தமிழ் நூல்களை மின்வணிகத்தில் விற்பனை செய்யச் சில தளங்களே உள. 31,700 தலைப்புகளை 40 பாட வகைகளாக்கி, 1999ஆம் ஆண்டு முதலாக மின்னம்பலத் தளத்தின் மூலம் காந்தளகத்தின் விற்பனை செய்தது வருகின்ரனர். இன்தாம், தம்பிபுக்ஸ், தமிழ்புக்ஸ் எனப் பிற மின்னம்பலத் தளங்களும் உள. ஒவ்வொரு பதிப்பாளரும் தத்தம் வெளியீடுகளை மின்னம்பலத் தளத்தில் உள்ளடக்குவது விற்பனையை நோக்கியேயாம்.
சந்தை என்றால், தமிழக அரசின் நூலகத் துறை என்ற மனப்பாங்குடன் செயல்படும் பதிப்பாளர், பதிப்பத் தொழிலுக்கே மூடுவிழா நடத்திவிடுவர் என்ற கருத்தை 1966இல் வலியுறுத்தியவர் கண. முத்தையா. அதுமட்டுமல்ல தொழிலின் எதிர்கால வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பதை விரிவாக எழுதியுள்ள அவரின் பல கருத்துகள் (பதிப்பும் படிப்பும் 2002, பக்.53,54)இன்றும் பொருந்துவன.
தமிழ் நூலின் விற்பனை விலை குறைவாக இருக்கவேண்டுமென்பது எதிர்காலத்துக்குப் பொருந்தாது. அடக்க விலைப் பதிப்புகளும் மலிவுப் பதிப்புகளும் பொருண்மிய வளர்ச்சியற்ற சூழ்நிலைக்குரியவை. 2020ஆம் ஆண்டில் தமிழர் யாவரும் வருவாயாப் பெருக்கம் உள்ள சூழலில் வாழ்வர் என்பதை உளத்திருத்தி, விலை ஏற்றத்தையும் தர ஏற்றத்தையும் தவிர்க்க முடியாத நடவடிக்கையாகப் பதிப்பாளர் / விற்பனையாளர் கருதவேண்டும்.
விற்பனையாளர் வலைப்பின்னல் பெருக, அவர்களும் விலையின் ஒரு பங்கைப் பெறவேண்டியவராவர். மொத்தவிற்பனைக் கழிவு ஒரு நூலின் 80% வரை இருக்கும் (கடந்த வாரம் ஆங்கில நூல் ஒன்றுக்குச் சென்னையில் விற்பனைக் கழிவாக 80% பெற்ற சான்று பார்க்க) காலம் தமிழ் நூலுக்கு வந்தால், விற்பனை அளவும் பல்கிப் பெருகும். அபரிதமாக விற்பனையாகும் பிற மொழி நூல்களுக்கு மொத்த விற்பனைக் கழிவுகள் விலையின் பாதிக்கு மேல் இருப்பது வழமை. விலையை அதிகரித்தலே ஒரே வழி. வாங்கும் சக்தி பெருகி வருவதால் விலை அதிகரிப்பை நுகர்வோர் தாங்கிக்கொளிவர்.
நூலகங்களே தமிழ் பதிப்புத் துறையின் ஆவணக் காப்பகங்கள். வாசகர்களைச் சென்றடையாவிடினும் நூல்கள் பல, நூலகங்களைச் சென்றடைகின்றன. அங்கே பாதுகாப்பாக இருக்கின்றன.
தமிழில் வெளியாகும் ஒவ்வொருநூலும் தமிழ்நாட்டில் கன்னிமாரா நூலகத்துக்கு மட்டுமே சென்றடைகின்றது. இந்தியாவில் வேறு நான்கு நூலகங்களுக்குச் செல்கின்றது. இது போதுமானதல்ல. தமிழ்நாட்டில் ஆகக் குறைந்தது பத்து நூலகங்களை அவை கட்டாயமாகச் சென்றடைவதுடன், மலேசியா, சிங்கப்பூர், ஈழம் ஆகிய நாடுகளின் தலை நூலகம் ஒன்றுக்கும் அனுப்புவது கட்டாயமாகவேண்டும். ஆவணப் பாதுகாப்புக் கண்ணோட்டம் மட்டுமல்ல, விற்பனைப் பெருக்கத்துக்கும் மாதிரி நூல்களாக இவை அமையும்.
மின் வணிகம், குறுந்தட்டு என தொழில் நுட்ப முன்னேற்றங்கள் நுழைந்தாலும் அச்சிட்ட நூல்களுக்கு அடுத்த 20 -50 ஆண்டுகளுக்கு வளமான சந்தை உண்டு. இருப்பில் வைத்திராமல், தேவைக்கு மட்டும் அவ்வப்பொழுதே நூல்களை அச்சிடும் முறை விரைவில் தமிழ்நூல் பதிப்பாளரை ஆட்கொள்ளும். இத் தொழில் நுட்பம் பதிப்பாளர், விற்பனையாளர் இருவருக்கும் அருந் துணையாகும்.
எழுத்தாளர் பங்களிப்பு, பதிப்பாளர் பங்களிப்பு, விற்பனை வலைப்பின்னல் உருவாக்கம், நூலகர் பங்களிப்பு யாவும் சேர்ந்தால்தான், விலைகொடுத்து வாங்கும் வாசகரைத் தமிழ் நூல்கள் சென்றடையும். தமிழ்ப் பதிப்புத் தறையின் எதிர்காலம் இவர்களின் இணைந்த முயற்சியில் தங்கியுள்ளது.

ஈழத்துப் புலமை தமிழ் உலகில் புகழ்பூக்க......

ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்நாட்டுக்கு வந்து, தன் கவிதைகளை அரங்கேற்றினார். சங்கப் பாடல்களுள் ஏழு (அக.-3 குறு.-3நற்.-1) இடங்களில் அவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்திலும் பின்பும் வாழ்ந்து மறைந்த பல நூற்றுக்கணக்கான ஈழத்துப் படைப்பாளிகளின் சிறந்த ஆக்கங்கள் தமிழ் உலகுக்குத் தெரியுமாறு வெளி வரவில்லை.
யாழ்ப்பாண அரசன் அரசகேசரியின் மொழிபெயர்ப்பு நூல் இரகுவ மிசம். யாழ்ப்பாணம் சின்னத்தம்பிப் புலவர் திருமறைக் காட்டின் அருள்மிகு வேதாரணிய ஈஸ்வரர் கோயிலைப் பாடிய மறைசை அந்தாதி சிறந்த பிரபந்த இலக்கியம். எனினும் தமிழ் உலகில் இதுபோன்ற இலக்கியங்கள் பற்றி அறிந்தவர்களும், பேசுபவர்களும் ஈழத் தமிழர்களாகவே இருப்பர்.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டில் பதிப்பு முயற்சிகளை மேற்கொண்டார். முப்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்டார். சென்னையை நடுவணாகக் கொண்டு இவரது பதிப்பு முயற்சிகள் அமைந்ததால், தமிழ் நாடு, மலேசியா, சிங்கப்பூர், பிஜி, மொரிசியசு, தென்ஆபிரிக்க அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார். நாவலரின் நாவன்மையையும், உரைநடை வளத்தையும், பதிப்பு வன்மையையும் போற்றாத உலகத் தமிழர்கள் குறைவு.
இவரையொட்டியே சி. வை. தாமோதரம்பிள்ளையும் சென்னையைப் பதிப்புக் களமாகக் கொண்டார்.
வைமன் கதிரவேற்பிள்ளையின் அகாராதிகளை மதுரைச் தமிழ்ச் சங்கம் வெளியிட்டதால் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துக் கொண்டது.
காசிவாசி செந்திநாத ஐயர், தென்புலோலியூர் கதிரவேற்பிள்ளை போன்றோர்கள் தமிழகத்தில் தம் பதிப்புகளை வெளியிட்டதால் நன்றாக அறியப்பட்டனர்.
சுவாமி ஞானப்பிரகாசரையோ, கல்லடி வேலுப்பிள்ளையையோ, மட்டுவில் ம. க. வேற்பிள்ளையையோ, ம. வே. திருஞானசம்பந்தரையோ, வித்துவான் கணேசையரையோ, பண்டிதமணி கணபதிப்பிள்ளையையோ, சு. சிவபாதசுந்தரனாரையோ தமிழ்உலகு முழுமையாக அறியவில்லை. புலமையிலும், திறமையிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா இவர்களைப் போன்ற பலரைத் தமிழ் உலகு அறியாததற்குக் காரணம் இவர்களின் பதிப்புகள் ஈழத்துக்குள் முடங்கியதுதான்.
சுவாமி விபுலானந்தரின் தமிழக வாழ்வும், பதிப்பு முயற்சியும், தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் யாழ் நூல் அரங்கேற்றமும் தமிழுலகின் மிகச் சிறந்த புலமையாளருள் ஒருவராக அவரைக் கணிக்க உதவின. தனிநாயாக அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச் சென்னையில் நடத்த முன்பே, தமிழக அறிஞர்களுக்குப் புலப்பட்டவர். தமிழ் உலகின் கணிப்பைப் பெற்றவர். அதற்குக் காரணம் தூத்துக்குடி மறை மாவட்டத்தின் பங்குத் தந்தைகளுள் ஒருவராக அவர் இருந்து தமிழ் நாட்டில் தன் புலமையை வெளிக்காட்டியதுதான். அதனால் உலகம் போற்றுமளவு உயர்ந்தார்.
ஈழத்துப் பூதந்தேவனார் முதலாகத் தனிநாயக அடிகள் ஈறாக, ஈழம் உற்பவித்த சிறந்த சிந்தனையாளர்கள், புலமைப் பெட்டகங்கள், திறமைக் கொழுந்துகள் பற்பலருள் மிகச் சிலரையே தமிழுலகு அறிந்தமைக்குக் காரணம், இச்சிலர் தமிழ் நாட்டின் புலமைக் களத்துள் புகுந்து புலப்பட மிதந்தமையே.
தமிழ் நாட்டில் வெளியான நூல்கள் ஈழத்துக்கு வந்து சேரும் அளவுக்கும், விகிதாசாரத்திற்கும் ஏற்ப ஈழத்து வெளியீடுகள் தமிழ் நாட்டிற்குள் வராததும் இதற்குரிய அடிப்படைக் காரணங்களுள் ஒன்று.
தமது தரமான வெளியீடுகளைத் தமிழ் நாட்டுக்கு அனுப்ப முடியவில்லையே! தமிழ் நாட்டுப் புத்தகச் சந்தைக்குள் புக முடியவில்லையே! என்ற ஆதங்கம் ஈழத் தமிழ்ப் புலமையாளர்களுக்கு நெடுங் காலமாகவே உண்டு. இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக 1971-1977 கால ஆட்சியில் கி. லட்சுமண ஐயர் தலைமையில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பிரேம்ஜி உள்ளிட்ட முற்போக்கு எழுத்தாளர் அமைப்பு, தமிழ் நாட்டில் வெளியாகும் `குப்பை - கூளங்கள்' ஈழத்திற்குள் வருவதற்குத் தடைகளும் கட்டுப்பாடுகளும் அமைக்க விதந்துரைத்தது. அவர்களின் விதந்துரையைக் கொழும்பு அரசு ஏற்று 1971-1977 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தியது.
இதன் பெறுபேறாக ஈழத்துப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஈழத்திலே பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. வீரகேசரியின் மாதமொரு நாவல் திட்டத்தின் கீழும், பிற பதிப்பாளர்களின் திட்டங்களின் கீழும் பல நூல்களை ஈழத்துப் படைப்பாளிகள் இக்காலத்தில் வெளிக் கொணர்ந்தனர். குடத்தில் இட்ட விளக்காகவே இவ்வெளியீடுகள் ஈழத்துள் முடங்கின. எதிர்ப்புச் சிந்தனையின் செயல்வடிவமாகவே இஃது அமைந்தது.
க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும், கி. இலட்சுமண ஐயரும், செ. கணேசலிங்கனும் தமிழ் நாட்டில் பதிப்பகங்களை அணூகித் தமது நூல்களை வெளியிட்டு வந்தனர். தமது ஈழத்துச் சக படைப்பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் பதிப்புக் களம் அமைத்துக் கொடுத்தார்களா என்ற வினா இப்பொழுதும் கேட்கப்படுகிறது. அக்காலத்தில் சென்னை பாரி நிலையம் செல்லப்பன் ஈழத்துப் படைப்பாளிகளை ஊக்குவித்தார். நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ் முற்போக்கு எழுத்தாளரை மட்டும் ஊக்குவித்தது.
1980இல் காந்தளகம் அமைந்ததும் ஈழத்துநூல்களை இந்தியாவுக்குள் முதல்முதலாக இறக்குமதி செய்தது. இன்றுவரை இறக்குமதி செய்துவருகிறது.1990க்குப் பின் குமரன் பதிப்பகம் (செ. கணேசலிங்கன்), மித்ரா பதிப்பகம் (எஸ். பொன்னுத்துரை) ஆகிய பதிப்பகங்களும் தமிழ் நாட்டில் ஈழப் புலமைப் படைப்பாளிகளுக்கு பதிப்பரங்குகளாகின. 1983க்குப் பின் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளுக்குத் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களான நர்மதா, கலைஞன், திருமகள், சிஎல்எஸ், பாரி, கழகம், நியுசெஞ்சுரி, பொதியவெற்பன் போன்றவை ஆதரவு கொடுத்தன.
கடந்த சில ஆண்டுகளாக மணிமேகலை பிரசுரம் புலம் பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களது ஆக்கங்களை வெளியிடுவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி ஆண்டொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டு வருகிறது. இத்தகைய முயற்சியை இதுவரை வேறெந்தத் தமிழகப் பதிப்பகமும் மேற் கொள்ளவில்லை.
எனினும் காந்தளகம் தவிர வேறெவரும் ஈழத்திலிருந்து தமிழ் நூல்களைத் தமிழகத்துக்கு இறக்குமதி செய்வதில்லை.
ஈழத்துப் படைப்பாளிகள் தத்தம் இடங்களிலேயே வெளியிடும் நூல்களை தமிழகச் சந்தைக்கும் அனுப்பக்கூடிய வாய்ப்பை 1977 முதல் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை-இந்திய வணிகக் கொடுக்கல்-வாங்கல் இந்தியாவிற்குச் சாதகமாகவே எப்பொழுதும் இருக்கும். இந்திய ஏற்றுமதி அதிகமாகவும், இலங்கை ஏற்றுமதி குறைவாக இருக்கும்போது இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய்ககூடிய புதிய பொருட்கள் எவை என்ற வினா அப்பொழுது கொழும்பில் எழுந்தது?
நானும் தி. ச. வரதராசனும் க. கைலாசபதியும், க. ஜீவகதாசும் மற்றும் சில படைப்பாளர் நண்பர்களும் 1978இல் யாழ்பாணத்தில் ஒருநாள் கூடினோம். தமிழ் நூல்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பொருளாகக் கருதுமாறு ஒரு தீர்மானம் இயற்றினோம். தமிழர் பொருளாதார இயக்கம் சார்பாக அத்தீர்மானத்தை அப்பொழுது வர்த்தக அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலிக்கு அனுப்பினோம். நாளிதழ்களில் செய்தியாகவும் இத்தீர்மானம் வெளிவந்தது. கொழும்பு அரசுக்கு அதில் ஆர்வம் இருக்கவில்லை.
தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ் நூல்களை இலங்கையில் இப்பொழுது பெருந்தொகையாக வாங்கத் தொடங்கியுள்ளார்கள். உள்ளூராட்சி அமைப்புகள், மாகாண அவைகள், கொழும்பு அரசின் அமைச்சுகள் நூலகங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. உதவியாகவும் மறுசீரமைப்புத் திட்டங்களின் கீழும் இலங்கைக்கு வெளிநாடுகள் நிதி வழங்குகினறன. உலக வங்கியும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நூலக வளர்ச்சிக்குக் கடன்கள் வழங்கி வருகின்றன.
இவ் ஒதுக்கீடுகளில் கணிசமான பகுதியை ஒவ்வொரு நிலையிலும் தமிழ் நூல்களைக் கொள்வனவு செய்யத் தருகிறார்கள். பல நூலகங்கள் முழுமையாக இவ் ஒதுக்கீடுகளைத் தமிழ் நூல்களுக்காகச் செலவு செய்வதில்லை. சில அலுவலகங்களில் ஏனோதானோவெனவும் திட்டமிடாமலும் தமிழ் நூல்களை வாங்குகிறார்கள். ஒரு தலைப்பையே ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வாங்கும் நிலையும் உண்டு. நூலகங்களுக்கான தமிழ் நூல் கொள்வனவில் அரசு வழங்கும் நிதி ஒதுக்கீடுகள் ஒருங்கிணைந்த முறையில் பயன்படுவதில்லை.
அண்மையில் தமிழ் அமைச்சர் திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். பல லட்ச ரூபாய்கள் பெறுமதிக்குத் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யவேண்டுமெனவும் தமிழகப் பதிப்பாளர் ஒருவரை நாடலாமா என எண்ணிக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அவரிடம் பின் வரும் செயற் திட்டத்தை எழுதிக் கொடுத்தேன்.
1. கொழும்பு அரசின் பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் நூல் கொள்வனவுக்கான நிதி ஒதுக்கீடுகளைத் திரட்டி தமிழக அரசின் பொது நூலக இயக்குனரிடம் கொடுத்து ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படிகள் வேண்டும் எனக் கூறுதல்.
2. தமிழகத்தில் வெளியாகும் தமிழ் நூல்களை அந்நூல்களில் குறிப்பிட்டுள்ள விற்கும் விலைக்குக் கொளவனவு செய்யாமல், தமிழக அரசின் பொது நூலகத் துறை நிர்ணயித்த விலையான - பதினாறு பக்கப் படிவம் ஒன்றுக்குத் தலா ரூ.2.10பைசா அல்லது ரூ.2.60பைசா என்ற விலை அடிப்படையில் வாங்குதல்.
3. நூல்களைத் தெரிவுசெய்யும் தமிழக அரசின் குழுவில் கொழும்பு அரசின் பிரதிநிதிகள் இருத்தல்.
4. மாற்றாக இலங்கையில் வெளியாகும் ஈழத்தமிழ்ப் படைப்புகள் ஒவ்வொன்றிலும் 850 படிகளைத் தமிழக அரசின் நூலகத் துறை கொள்வனவு செய்தல். இலங்கை அரசு ஆண்டுதோறும் விளம்பரம் செய்து தமிழகத்தைப் போல இலங்கையிலும் விலை நிர்ணயம் செய்து, குழு அமைத்து, தெரிவு செய்து, வாங்கித் தமிழக அரசுக்கு அனுப்புதல்.
6. இந்த இரு தரப்புத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாட்டை இலங்கை-இந்திய அரசுகளின் கூட்டுச் செயற்பாடாக உடன்பாடு எழுதுதல்.
7. இதன்காரணமாய் ஒவ்வொரு ஆண்டிலும் தமிழகத்தில் வெளியாகும் புதுப்பதிப்புகள் மட்டுமே நூலகங்களைச் சென்றடையும். குறைந்த விலையில் தமிழக நூல்கள் இலங்கை நூலகங்களுக்குக் கிடைக்கும். ஈழத்துப் படைப்பாளிகள் தமிழகப் பதிப்பகங்களை நம்பியிராமல் ஈழத்திலேயே வெளியிட அந்நூல்கள் தமிழக நூலகங்களையும் சென்றடையும். தமிழக நூலகங்களில் ஈழவெளியீடுகள் இருந்தால் அந்நூல்களுக்குத் தமிழகப் புத்தகச் சந்தையிலும் `கிராக்கி' ஏற்படும். தமிழகப் பதிப்பகங்கள் ஈழத்து வெளியீடுகளை இறக்குமதி செய்யும் நிலை ஏற்படும். ஈழத்துப் பதிப்புத்துறை புதுமலர்ச்சியுடன் ஒரு தொழிலாகவே வளரும். மாதம் ஒரு நாவல், மாதம் ஒரு அறிவியல் நூல் என்ற திட்டங்கள் ஈழத்தில் மீண்டும் மலரும். தரமான பதிப்புகளை ஈழத்தவரால் தமிழுலகுக்குத் தரமுடியும் என்ற நிலை ஏற்படும்.
ஈழத் தமிழரின் புலமைத் திறமையும், அறிவு வளமும் தமிழ் உலகெங்கும் பயன்பட வேண்டுமெனிலோ அறியப்பட வேண்டுமெனிலோ தமிழக நூலகங்களிலும் புத்தகச் சந்தையிலும் ஈழத்தில் வெளி வரும் தமிழ் நூல்கள் இடம் பெற வேண்டும். இதற்கான முதற்படியாக இலங்கை-இந்தியத் தமிழ் நூல் கொள்வனவு உடன்பாடு அமையவேண்டும். ஈழத் தமிழ்ப் புலமைக் கொழுந்துகள் தமிழ் உலகெங்கும் அறியப்பட இது நேர்வழி.

பதிப்புலகில் நூறாண்டுகாலம்

அறிமுகம்
மூன்றாண்டுகளுக்கு முன், 2001ஆம் ஆண்டு தையில் நடந்த 24ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில், நூற்றாண்டு கண்ட முதலாவது தமிழ்ப் பதிப்பகம் எனப் பாராட்டும் விருதை, மயிலாப்பூர் அல்லயன்ல் நிறுவனம் பெற்றுக்கொண்டது. 1896இல் எழுதுபொருள் கடையாகத் தொடங்கி, 1901இல் பதிப்பகமாக மிளிர்ந்த அல்லயன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய திரு. குப்புசாமியின் மகன் திரு. கே. வி. எஸ். மணி விருதைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நூல் பதிப்புத் தொழிலில் ஒரு நூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாகப் பணிபுரிவதென்பது மிக எளிதான ஒன்றல்ல. ஒரு புத்தகத்தை வெளியிடுவதே குழந்தையைப் பெறுவது போன்ற கடினமான உழைப்புத் துன்பமும் ஆன்ம உணர்வு இன்பமும் தரும் பணியாக அமைகையில், நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பற்பல் தமிழ்நூல்களை வெளியிடும் பணி, அதுவும் தந்தை, மகன், பெயரன் என மூன்று தலைமுறையினரின் பணி பாராட்டுக்குரியதே.
அக்கண்காட்சியை நடத்திய காலத்தில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் (தெபுவிபச) செயலராக இருந்தவர் திரு. சிறீனிவாசன். அவரே அல்லயன்ஸ் பதிப்பகத்தின் ஆட்சியராகவும் இருந்தார். முதன்முறையாக இச்சங்கம் இத்தகைய விருது ஒன்றை அந்த ஆண்டுதான் வழங்கியது. நூற்றாண்டு கண்ட ஒரே தமிழ்ப் பதிப்பகம் என்பதே விருதின் பெயராகும்.
தமிழ்ப் பதிப்பகங்கள், நூறாண்டுக் காலத்துக்குமேல் தொடர்ந்து நீடித்துவருகின்றன என்ற செய்தியை உலகுக்கு எடுத்துக் கூறி உற்சாகத்தை ஊட்டியதுடன், இடையறாது, சலிப்பின்றி உழைத்தால் இத்தகைய சாதனைகளை ஏனைய தமிழ்ப் பதிப்பாளரும் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் இந்நிகழ்வு வளர்த்தது. அந்த வகையில் தெபுவிப சங்கத்தாரைப் பாராட்டவேண்டும்.
ஆனாலும் நூற்றாண்டு கண்ட தமிழ்ப் பதிப்பகம் அல்லயன்ஸ் மட்டும்தானா என்ற வினாவைச் சங்கம் எடுத்து நோக்கியதாகத் தெரியவில்லை. மகன் செயலாளராக இருக்கும் ஒரு அமைப்பு, அவரின் தந்தைக்கு விருதை வழங்குகிறதே! உயர் பொறுப்பில் உள்ளவர் ஒருவர் தன் குருதிவழி உறவினருக்குக் காட்டும் தனிச்சலுகை (nepotism) என்ற கருத்து வந்துவிடுமே! என்ற அச்ச உணர்வுகளும் சங்கத்துக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
விருது வழங்கிய 2001ஆம் ஆண்டில், நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நூல்களைத் தொடர்ச்சியாகப் பதிப்பித்து வந்த நிறுவனங்கள் நான்குக்கு அதிகமாக இருந்தன. அவற்றை இங்கு குறிப்பிடுவதும், அவை தொடர்பான விவரங்களைத் தருவதும் பயனுள்ளதாகும். தமிழ்ப் பதிப்பு முயற்சி வரலாற்றுக்கு அணிசேர்ப்பதுமாகும்.
பைபிள் சொசைற்றி
கிபி. 1811 இல் கொல்கத்தாவில் தொடங்கிய பைபிள் சொசைற்றி, பைபிளுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிடத் தொடங்கியது. 1820இல் சென்னையில் இதற்கு அலுவலகம் அமைத்து, இன்றுவரை பைபிளுக்குப் பல தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுவருகிறது.
கிபி. 1841இல் யாழ்ப்பாணத்திலிருந்து பீற்றர் பேர்சிவல் பாதிரியார் சென்னைக்கு ஆறுமுகநாவலுடன் விவிலியத் திருப்புதலைக் கொணர்ந்தார். சென்னையில் இத்தமிழாக்கம் பரிசீலிக்கப் பெற்று, 1842ஆம் ஆண்டளவில் பைபிள் சொசைற்றியால் பதிப்பிக்கப் பெற்றது.
அண்மையில், 1995ஆம் ஆண்டு வெளிவந்த திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு முயற்சிக்கும் பைபிள் சொசைற்றியே 1968ஆம் ஆண்டு முதலாகக் காரணராக இருந்தததை நோக்கும் பொழுது, தமிழில் நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர்களுள் இவர்களையும் அடக்கிவிடலாம். கிபி. 2011இல் இருநூறாண்டுகள் நிறைவுவிழாவை, அதுவும் தமிழ்ப்பதிப்புகளை இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகக் வெளியிட்டுவரும் விழாவைக் கொண்டாடுவோம் என்கிறார் அதன் சென்னைப் பொறுப்பாளர், வணக்கத்துக்குரிய முனைவர் எபி சாமுவேல்.
ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்பு
கிபி. 1849இல் சூடாமணி நிகண்டு நூலைப் பத்துத் தொகுதிளாகச் சென்னையிலே பதிப்பித்துத் தன் பதிப்பு முயற்சிகளைத் தொடங்கியவர் ஆறுமுகநாவலர். கிபி. 1851இல் யாழ்ப்பாணத்தில் நிறுவிய ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை, அதன் நீட்டமாக கிபி. 1870இல் சென்னை தங்கசாலைத் தெருவில் நிறுவிய ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன யந்திரசாலை இன்றும் அதே தெருவில் அதே பெயரில் இருப்பதையும், இன்றுவரை ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்புகளாகத் தமிழ்நூல்களை இடையீடின்றிப் பதிப்பித்து வருவதும் கண்கூடு.
ஆகமொத்தமாக 68 தமிழ் நூல்கள் அப்பதிப்பகம் மூலமாக இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றுள் பல நூல்கள் முப்பதுக்கும் அதிகமான மறுபதிப்புகளைக் கண்டுள்ளன. முதலாம் சைவவினாவிடை இருநூற்றுக்கும் அதிகமான பதிப்புகளைக் காண, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள பிற பதிப்பகங்களும் உதவின. 1965இல் முதல் பதிப்பைக் கண்ட இலக்கண வினாவிடை 1995இல் தனது 28ஆவது பதிப்பைக் கண்டது. சைவ சமயம், தமிழ் மொழியியல், அகராதி, பூமிசாத்திரம் என அப்பதிப்பகத்தின் பாடவகைப் பரப்பும் விரிந்தது.
154 ஆண்டுகளாகத் தொடர்ந்து நல்ல தமிழ்ப்பதிப்புகளை வெளியிட்ட ஷ்ரீலஷ்ரீ ஆறுமுகநாவலர் பதிப்பு, நுல்களிள் வகைக்கு மட்டுமல்ல, பிழைகளற்ற பதிப்பு, சுத்தத் தமிழ்ப் பதிப்பு என்ற சிறப்புகளுக்கும் உரியதாயும், பின்வந்த பல தமிழ்ப் பதிப்பகங்களுக்கு வழிகாட்டியாயும் இருந்துள்ளது என்கிறார் சிதம்பரம் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையின் முன்னாள் தலைமையாசிரியரும், குன்றக்குடி அடிகளாருக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆறுமுகநாவலர் அறக்கட்டளையின் அறங்காவலராகப் பொறுப்பு வகிப்பவருமான திரு. க. சுவாமிநாதன்.
கிறிஸ்தவ இலக்கியக் கழகம் (சிஎல்எஸ்)
கிபி. 1858இல் தொடங்கிய கிறிஸ்தவ இலக்கியக் கழகம் தொடக்கத்தில் துண்டுவெளியீடுகளையே கொணர்ந்ததாயினும் பின்னர் தமிழ்ப் பதிப்பின் அனைத்துப் பாடவகைகளிலும் நூல்களை வெளியிட்டது. திரு. வி. க. போன்ற சிறந்த பல படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிப்பிப்பதுடன், அண்மைக் காலத்தில் தலை சிறந்த படைப்பாளிகளின் நூல்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறது என்கிறார் அங்கு தமிழ்ப்பதிப்பாசிரியராகப் பணிபுரியும் திருமதி சுவீற்லின் பிரபாகரன்.
145 ஆண்டுகள் தமிழ்ப் பதிப்புலகில் தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டுச் சாதனை புரிந்துவரும் கிறிஸ்தவ இலக்கியக் கழகத்தின் பொறுப்பாளராக அண்மைக்காலம் வரை திரு தயானந்தன் பிரான்சில் இருந்தார்.
யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலை
யாழ்ப்பாணத்தில் கிபி. 1881இல் தொடங்கிய சைவப்பிரகாச யந்திரசாலை இன்றுவரை, இடைவிடாது தமிழ்நூல்களைப் பதிப்பித்து வருகிறது. அண்மையில் புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய மறுதோன்றி அச்சகத்தையும் கணிப்பொறிசார் பக்கமாக்கலையும் தன்னகத்தாக்கியுள்ளது. இந்து சாதனம் என்ற தமிழிதழையும் இந்து ஓர்கன் என்ற ஆங்கில இதழையும் நடத்திவருகிறது. போர்ச்சூழ்நிலை காலத்தையும் தாங்கி, தளராது தமிழ்ப் பதிப்பு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தமிழ் மொழி, சைவ சமயம், சங்க நூல்கள், அகராதிகள், புனைகதை, கவிதை, புவியியல், அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை, மருத்துவம் எனப் பன்முகத் தமிழ்ப் படைப்பாளிகளுக்குப் பதிப்புக் களம் அமைத்துக் கொடுக்கிறது சைவப்பிரகாச யந்திரசாலை.
122 ஆண்டுகளாகத் தமிழ்நூல் பதிப்பு முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் சைவப்பிரகாச யந்திரசாலை, ஈழத்து வாசகர்களை நோக்கியே அமைந்ததால், தமிழகத்தில் உள்ள ஒருசிலரைத் தவிரப் பலரின் கண்களில் படாதமை வியப்பல்ல என்றார், அந்த அமைப்பின் ஆட்சியருள் ஒருவரும் யாழ்ப்பாணம் பெரியபுலம் மாவித்தியாலய அதிபருமான திரு. கனகசிங்கம்.
முடிவுரை
தெற்காசியாவிலேயே முதன்முதல் தமிழ்நூலொன்றுதான் அச்சுவாகனம் ஏறியது. அன்று தொடக்கம் தமிழில் அச்சிட்டுப் பதிப்பிக்கும் வழக்கம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. எனினும் நூற்றாண்டுகாணும் அளவுக்குத் தொடர்ச்சியாக மேற்காணும் ஐந்து நிறுவனங்களையுமே இப்பொழுது அடையாளங்காண முடிகிறது. அந்த வரிசையில் அல்லயன்ஸ் ஐந்தாம் இடத்தையே பெறுகிறது. தெபுவிபச வின் உறுப்பினரிடையே நூற்றாண்டு கண்ட நிறுவனம் என விருதை வழங்கியிருப்தே முறையாகும். எனினும் முறைப்படுத்தக் காலம் கடந்துவிடவில்லை. மற்ற நான்கு நிறுவனங்களுக்கும் இந்தக் கண்காட்சியிலாவது (2004) விருது வழங்கிச் சிறப்பிப்பது தெபுவிபச வின் கடமையாகும்.

Wednesday, September 21, 2005

பட்டய மெய்ப்பாளர் பயிற்சி

1.1 படைப்பாளி எழுதியது மூல ஏடு. அதை அப்படியே படியெடுக்கக் கொடுத்தபோழ்து, படியெடுத்த எழுத்தர், பாடபேதங்களையும் இடைச் செருகல்களையும் சேர்த்தார். எழுதினவர் ஏட்டைக் கெடுத்தார் என்ற பழமொழியும் எழுந்தது. ஏடுகளை நம்பியிருந்த காலத்தில் எழுத்தரே பதிப்பாசிரியருமானார்!
1.2 அச்சும் தாளும் வந்தது; அச்சிடமுன் மூலத்துடன் ஒப்புநோக்கும் வசதி வந்தது. படைப்பாளியின் மூலம் கெடாமல் அப்படியே அச்சிடக் கூடிய வசதி வந்தது.
1.3 எழுத்துப் படைப்பாளிக்கு மொழியே வாகனம். மொழி அறிவு இல்லாதவர் எழுத்துப் படைப்பாளியாக முடியாது. ஒரு துறையில் வல்லுநராயுள்ளவர் மொழியிலும் வல்லுநராயிருப்பது எளிதல்ல. எனவே எழுத்துப் படைப்பாளிக்கு மொழியியல் வல்லுநரின் உதவி கட்டாயத் தேவை. தான் எழுதியதை மொழியியல் வல்லுநரின் பார்வைக்கு அனுப்புவதால் சொல்ல வந்த பொருளை, மயக்கமின்றியும் வழுவின்றியும் சுருக்கமாக வும் எவராலும் வாசருக்குக் கொடுக்கமுடியும். தன் துறைசார்ந்த பிறிதொருவரின் பார்வைக்கு அனுப்புவதன் மூலமும் அப் பொருளில் உள்ள பொருட் குற்றங்களையும் குறைகளையும் போக்க முடியும்.
1.4 பொருட் குற்றங்களை நீக்கி, பனுவலை ஒழுங்கமைத்து, சுருக்கவேண்டியதைச் சுருக்கி, நீட்டவேண்டியதை நீட்டி, மாற்றவேண்டியதை மாற்றி, நிறுத்தக் குறிகளையும் குறியீடு களையும் ஏற்ற இடங்களில் அமைத்து, தலைப்பிட்டு, துணைத் தலைப்பிட்டு, பந்தி பிரித்து, வரை படங்கள் மற்றும் புகைப் படங்களை உரிய இடங்களில் அமைத்து, அடிக்குறிப்புகளைச் செம்மையாக்கித் தொடர்பாக்கி, மேற்கோள் பட்டியல், உசாத் துணைப் பட்டியல், சுட்டி போன்றவற்றைத் தயாரித்து, படைப்பாளியின் கருத்து எளிதாக வாசகர் உள்ளத்தில் பதியுமாறு அமைப்பவர் பதிப்பாசிரியர். ஒவ்வொரு நிலை யிலும் படைப்பாளியைக் கலந்தே பதிப்பாசிரியரின் பணி அமையும்.
1.5 படைப்பாளி உருவாக்க, துறை சார்ந்தோர் பொருட் குற்றம் நீக்க, பதிப்பாசிரியர் பனுவலைச் செம்மையாக்க, தட்டச்சாளர் கணினியில் தட்டச்சுச் செய்து பக்கமாக்கி, அச்சுப் படி ஒன்றைத் தர, மெய்ப்பாளர் பணி தொடங்குகிறது. மொழியியல் வல்லுநரே மெய்ப்பாளராகிறார்.
1.6 அச்சுத் தொழில், மொழியியல், மெய்ப்புக் குறியீடுகள் என்பனவற்றில் அறிவு, செம்யைான கையெழுத்து, பனுவற் பொருளில் பயிற்சி, இவை உடையோரே சிறந்த மெய்ப்பா ளராவர்.
1.7 எழுத்தறிவும் படிப்பறிவும் முன்னெப்பொழுதுமில்லாத அளவு தமிழரிடைப் பெருகி உள்ளது. இதனால் படைப்பாளிகள் பெருகியுளர், வாசகரும் பெருகி உளர். அச்சகங்களின் எண்ணிக்கை பெருக, பதிப்பாளர் எண்ணிக்கை பெருக, விற்பனையாளர் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. தாளில் அச்சாவதை விற்பனையாக்கும் தொழில் தமிழர் வாழ்வின் இன்றியமையததாகியுளது.
1.8 அச்சுத் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் உள. அச்சுக்கு இறுதி வடிவம் வருமுன் சரி-பிழை பார்த்துக் கொடுக்கும் மெய்ப்பாளர் தொழிலுக்குப் பயிற்சி நிலையங்கள் மிகக் குறைவு. சென்னையில் இரண்டொரு இடங்களில் ஆங்கில மொழி மெய்ப்பாளர் கற்கை உண்டு. தமிழ் மொழி மெய்ப்பாளர் கற்கை வசதிகள் இல்லை என்றே கூறலாம்.
1.9 ஊடகங்கள், விளம்பரங்கள், அலுவலக ஏடுகள், நூல்கள், பிறவெளியீடுகள் யாவும் தவறுகளின்றி வெளிவர, ஒவ்வொரு இடத்திலும் மெய்ப்பாளர் பணி இன்றியமையாதது. சொல்திருத்தி, இலக்கண அமைதி போன்ற கணினி மென்பொருள்கள் தமிழுக்கு வந்துளவாயினும், அச்சுப் படியைத் திருத்தும் பணிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மெய்ப்பாளர் பணி தேவைப்படும்.
எனவே தமிழ் மொழியில் சிறந்த மெய்ப்பாள வல்லுநர்களைத் தயாரிக்க வேண்டிய தேவை உண்டு. அச்சகமும் ஒலி/ஒளி ஊடகங்களும் உள்ள இடங்களில் தொழில்முறை மெய்ப் பாளருக்கு வேலைவாய்ப்பு உண்டு. தவறற்ற தமிழ்ப் பனுவல் வெளிவருதல்; அதற்ககுத் தேவையாள மெய்ப்பாளர் பணி வாய்ப்புகைளைப் பெருக்குதல்; இதுவே இச்செயற்றிட்டத்தின் நோக்கம்.

ஏற்ற பாடத்திட்டம், தகுதி வாய்ந்த மாணவர், தக்க ஆசிரியர், தகுந்த பயிற்றுக் கூடம், களப் பயிற்சி, முழுப் பயிற்சியும் முடித்துத் தேர்வில் வெற்றிபெற்றோருக்குப் பட்டய மெய்ப் பாளர் சான்றிதழ், அச்சகங்களும் ஊடகங்களும் பதிப்பகங் களும் இச்சான்றிதழை ஏற்று வேலைவாய்ப்புக் கொடுக்கும் ஒழுங்கு.

2.1.1 அச்சுத் தொழில் - வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)
2.1.2 நூலாக்க முறைகள் - பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண் முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.
2.1.3 செய்தி- விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைககள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு- விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வட ஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.
2.1.4 சொல்லியல்: பெயர்ச் சொல், வினைச் சொல், பேதச் சொல், கலைச் சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற
2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.
2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழா நிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெரு வழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.
2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.
2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.
2.1.9 மெய்ப்புக் குறியீடுகள்.

2.2.1 கல்வி: ஆகக் குறைந்தது 12ஆம் ஆண்டில் தமிழ்ப் பாடத்தில் 60%க்கு மேல் புள்ளி பெற்றவர் அல்லது அதற்குச் சமமான தகுதி.
2.2.2 அகவை: 18 ஆண்டுக்கு மேல் 30 ஆண்டுக்குள்.
2.2.3 மூன்று திங்கள் காலம் தொடர்ந்து பயிலகம் அருகே தங்கிப் படிக்கும் வசதி உடையவர்.
2.2.4 மாணவர் சேர்க்கைக்கான விளம்பரத்தை ஊடகங்களில் வெளியிடுதல்.

2.3.1 அச்சுத் தொழில் வல்லுநர் ஒருவர்.
2.3.2 பதிப்புத் தொழில் வல்லுநர் ஒருவர்
2.3.3 ஊடகத் தொழில் வல்லுநர் ஒருவர்.
2.3.4 தமிழ் மொழி வல்லுநர் நால்வர் (1. சொல் 2. சொற்றொடர் 3. வாக்கியம், 4. கட்டுரை).
2.3.5 மெய்ப்புக் குறியீட்டு வல்லுநர் ஒருவர்.
2.3.6 கற்கை ஒருங்கிணைப்பாளர் - பயிற்சி முதல்வர் ஒருவர்.
2.3.7 முதல்வரையும் ஆசிரியரையும் தேடும் பணி.

2.4.1 முப்பது மாணவர் கற்கும் வசதி, இருக்கை, மேசை, காற்றாடிகள், ஆசிரியருக்கு உரியன, கழிப்பறை.
2.4.2 கரும்பலகை, சிறப்புக் காட்சிகளுக்குத் திரை, ஒலி/ஒளிக் காட்சிக் கருவி, கணினி.

2.5.1 கணினி, தட்டச்சு-பக்கமாக்கல், ஊடுபடி, அச்சுப் படி வசதி; பார்த்தல் பயிலல் ஏழு நாள்கள்.
2.5.2 மறுதோன்றி அச்சகத்தில் இரு நாள்கள்.
2.5.3 கட்டாளரகத்தில் மூன்று நாள்கள்.
2.5.5 பதிப்பகத்தில் இருநாள்கள்
2.5.6 செய்தித் தாள் ஆசிரியர் பகுதியில் இரு நாள்கள்
2.5.7 வானொலிச் செய்திப்பிரிவில் ஒரு நாள்.
2.5.8 தொலைக்காட்சிச் செய்திப் பிரிவில் இருநாள்கள்.
2.5.9 பிற

2.6.1 முதல் வார இறுதியில் அச்சு முறைத் தேர்வு
2.6.2 இரண்டாம் வார இறுதியில் நூலாக்க முறைத் தேர்வு
2.6.3 மூன்றாம் வார இறுதியில் ஊடக முறைகள் தேர்வு
2.6.4 ஐந்தாம் வார இறுதியில் சொல்லியல் தேர்வு
2.6.5 ஆறாம் வார இறுதியில் சொற்றொடர் தேர்வு
2.6.6 ஏழாம் வார இறுதியில் வாக்கியத் தேர்வு
2.6.7 ஒன்பதாம் வார இறுதியில் பனுவல் தேர்வு
2.6.8 பத்தாம் வார இறுதியில் மெய்ப்புக் குறியீடுகள் தேர்வு
2.6.9 பதின்மூன்றாம் வார இறுதியில் பொதுத் தேர்வு.

2.7.1 பட்டமளிப்பு விழாவில் பட்டய மெய்ப்பாளர் சான்றிதழ் வழங்கல்.
2.7.2 முப்பது மாணவர்கள் பயில்வதை அச்சக, பதிப்பக, ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்து பணிவாய்ப்புத் தேடுதல், ஊதிய அளவை நிறுவுதல்.

3.1 பல்கலைக் கழகம், தன்னாட்சிக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இவை போன்றன கற்கை நெறியாக, பட்டயவகுப்பாக நடத்தல்.
3.2 அரசின் சிறுதொழில் இயக்ககம் பயிற்சி வகுப்புகளை நடத்தல்.
3.3 ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு அச்சகமோ பதிப்பகமோ ஆதரவாளராதல்.
3.4 சென்னை மற்றும் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளர் சங்கங்கள், பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர் சங்கங்கள் நிதி ஒதுக்கி, கல்வி நிறுவனத்துக்கோ சிறுதொழில் இயக்ககத் துக்கோ ஆதரவு தரல்.
3.5 மாணவரிடம் சிறு தொகையைக் கட்டணமாகப் பெறல்.
3.6 நிலனும் பொழுதும் வேறுபட, வரவும் செலவும் வேறுபடுமாதலால், கணக்குத் திட்டம் இங்கில்லை.
இச் செயற்றிட்ட அறிக்கையில் விடுபட்டன, நீக்கவேண்டியன, திருத்தவேண்டியன, மாற்றவேண்டியன உள. படித்தவர்கள் தத்தம் கருத்தை எழுதி அனுப்புக.

சிறிய அளவில் புத்தகக்காட்சி

1. அறிமுகம்:
கண்களால் காண்பவர் ஒருபுறம், அவர் கண்களை ஈர்க்கும் பொருள் மறுபுறம் - என்ற பொருள் அண்மைக் காலங்களில் காட்சி என்ற சொல்லுக்கு வந்துள்ளது.
அழகாக இருக்கும் எவையும் கண் களைக் கவர்கின்றன. எனவே,புத்தகக் கண்காட்சியில், நுழைவாயில் தொடக்கம் வெளியேறும் வாயில் வரைக்கும், எங்கும் எதிலும் அலங்காரமும், அழகும், ஒப்பனை யும், ஒழுங்கும் ஓங்கியிருக்க வேண்டும்.
2. அடிப்படைத் தேவைகள்:
காணவரும் மக்களுக்குரிய அடிப் படைத் தேவைகளான குடிநீர், சிற்றுண்டி, கழிவறை, வண்டி ஒதுக்குமிடம், ஓய்விடம், கைப்பை யாவும் காட்சி வளாகத்துள் அமைக்க.
சுத்தமான குடிநீரையும், சிற்றுண்டியை யும் வழங்கக்கூடிய கடைகள் காட்சி வளாகத்துக்கு அருகில் இருந்தால், உள்ளே வசதிகள் தேவையில்லை. அப்படி யில்லா விட்டால் கட்டாய மாகக் குடிநீர், குளிர் பானம், சிற்றுண்டிக்கான விற்பனைக் கூடம் ஒன்று காட்சி வளா கத்துள் அமைக்க.
கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்காகச் சுத்தம் செய்பவர் ஒருவர் போதுமான தண்ணீர் வசதி யுடன் எப்போதும் அங்கே காத்திருப்பாராக.
வண்டி நிறுத்துமிடத்தில் போதிய பாதுகாப்புத் தருக. வண்டிகளை எண்ணிட்டு, அடுக்காக வைத்து, மீள உரியவரிடம் சேர்க்கும் வரை, அவற்றுக்குச் சேதம் எதுவும் ஏற்படாது இருப்பது மிக முக்கியம். இதற்காகச் சிறிய தொகையைப் பெற்றுக் கொள்வதிலும் தவறில்லை.
களைப்புற்றவர், குழந்தைகளோடு வந்த தாய்மார், முதியவர், ஓய்வெடுப்பதற்காகக் காட்சி வளாகத்துள் மரநிழல் உள்ள வெளியில் நாற்காலிகள் பல அமைக்க.
காட்சி முடிந்து செல்வோர் தாம் வாங்கியவனவற்றை எடுத்துச் செல்லக் கைப் பைகளைத் தேடுவர். இவற்றைக் காட்சி வளாகத்தில் விற்பனைக்கு வைக்க.
வண்டி நிறுத்துமிடம், கழிவறை, குடி நீர்க் கூடம், ஓய்விடம் ஆயன செல்வதற் கான அம்புக் கோடிட்ட அறிமுகத் தட்டி களைக் காட்சி வளாகத்தில் முக்கிய இடங் களில் வைக்க.
இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே காட்சி வளாகத்திற்குள் வருபவர் தன்னம்பிக்கையோடும், பாதுகாப்பு உணர் வுடனும், பழகிய இடம் போன்ற கலகலப்புடனும், காட்சிக்கு வைத்துள்ள பொருள்களைப் பார்வையிடுவர்.
3. காட்சிப் பொருள், காட்சிக் கூடம்:
காட்சிப் பொருள், நூல்களாக இருக் கலாம், குறுந் தகடுகளாக இருக்கலாம், ஒலி-ஒளி நாடாக்களாக இருக்கலாம், ஓவியங்களாக இருக்கலாம், மழலையர் விளையாட்டுப் பொருள்களாகவும் இருக்கலாம். இவையாவும் புத்தகக் காட்சி சார்ந்த பொருள்களே.
கண் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் மேலேயும் போகாமல் ஒரு மீட்டர் கீழேயும் போகாமல் உள்ளதான அடுக்குத் தட்டு களில் புத்தகங்களை வைப்பது காண்பவ ருக்கு எளிதாக இருக்கும்.
மேசைகளில் புத்தகங்களை அடுக் குவதானால் அந்த மேசைகளருகே நின்று பார்க்கும் ஒருவரின் கண்ணிலிருந்து 45 செமீ.க்குக் கீழே போகாத உயரத்தில் புத்தகங்களை அமைக்க. குனிந்தவாறு பார்த்துக் கொண்டே போகுமாறு வைத்தால் காண்பவரின் களைப்பு அதிகமாக, விரை வில் காட்சி வளாகத்திலிருந்து நீங்கி விடுவார்.
மழலையர் விளையாட்டுப் பொருள் களையும், நூல்களையும் குறைந்த உயரத் திலும், நடுநிலைப்பள்ளி மாணவர் நூல் களை இடைப்பட்ட உயரத்திலும், வளர்ந் தோர்க்கான நூல்களை உயர்ந்த மேசை களிலும் வைப்பதன் மூலம் காட்சிக்கு வரும் அனைத்து வயதினரையும் கவரலாம்.
நடைஓடைகள் குறுகலாக இருக்கக் கூடாது. கூட்டமாக வருவோர் ஒருவரை ஒருவர் அழைத்துப் பொருளைச் சுட்டிக் காட்டி அலசக்கூடியவாறு நடைஓடைகள் இருக்கவேண்டும்.
4. இடம்:
காட்சி வளாகம் பள்ளியாக இருப்பதே பொருத்தம். திருமண மண்டபத்தையோ, நூலகக் கட்டிடத்தையோ, சமூகக் கூடங் களையோ பயன் படுத்தலாம். ஆனாலும் எந்த இடமும் மக்கள் நடந்தே வந்து போகக்கூடிய குறுந் தூரத்தில் இருக்க வேண்டும்.
புத்தகக் காட்சிகளுக்குப் பள்ளிகளே சிறந்த இடங்கள். அங்கே அறைகள் இருக்கும், மேசைகள் இருக்கும், கழிவறை கள் இருக்கும், திறந்த வெளிகள் இருக்கும், கூட்டத்தை ஒழுங்கு செய்யக்கூடிய அமைப்பும் இருக்கும். புத்தகங்களின் அருமை தெரிந்த மாணவர்களும், ஆசிரி யர்களும் அங்கிருப்பர். வாடகை எதுவும் கொடுக்காமல் அவ்விடங்களைப் பெற லாம்.
5. காலம்:
மாதத்தில் முதல் கிழமையின் வியா ழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களுமே புத்தகக் காட்சிக்கு உகந்த காலமாகும்.
மாதச் சம்பளம் வாங்குவோர், ஓய்வு ஊதியம் பெறுவோர் யாவரிடமும் மாதத் தொடக்கத்தில் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். வணிகரிடமும், தொழிலாளரிடமும் இந்தப் பணப் புழக்கம் நீளும். புத்தகங்களை வாங்குவதற் குரிய ஆர்வ மும் கவர்ச்சியும் இருந்தாலும் பணப் புழக்கம் இருந்தாலே காட்சிக்கு மக்கள் வருவர்.
காட்சி வளாகத்துள் காட் சிப் பொருள்களை அடுக்கும் பணியும், வளாகத்தை அலங் காரம் செய்யும் பணியும், தொண்டர்களையும், பணி யாளர்களையும், காட்சிக் கூட உரிமையாளர்களையும் இணைத்துப் பணிப்புரைகள் வழங்கி அங்கேயே தங்கும் வசதிகள் செய்து கொடுக்கும் பணியும், புதன் மாலையி லிருந்தே செய்ய வேண்டிய தால் அதற்கேற்ப இட அனுமதி முன்கூட் டியே பெறுக.
வியாழனும், வெள்ளியும் மாலை 2 மணி முதல் இரவு 8 மணி அல்லது 9 மணி வரை காட் சிக்கு ஏற்ற நேரங்கள்.
சனியும், ஞாயிறும் காலை 10 மணி முதல் இரவு 8 அல்லது 9 மணி வரை காட்சிக்கு ஏற்ற நேரங்கள்.
திங்கள் காலை 12 மணி வரை காட்சி வளாகம் தேவை. ஏனென்றால் ஞாயிறு இரவுக் காட்சி முடிந்த பின்பு திங்கள் காலை தான் அடுக்குகளைக் குலைத்துப் பொருள் களை வெளியே எடுத்துச் செல்லலாம். அதற்கேற்றவாறு அனுமதி பெறுக.
6. விளம்பரம்:
சுவரொட்டிகள், துண்டு வெளியீடுகள், இதழ்களில் விளம்பரங்கள், பள்ளி விளம் பரப் பலகைகளில் அறிவித்தல்கள், வணிக நிறுவனம் முன்பு தட்டி விளம்பரங்கள், தெருக்களுக்குக் குறுக்கே பதாகைகள், வானில் பறக்கும் பலூன் விளம்பரம், உள்ளூர் வானொலியில், கம்பிவழித் தொலைக்காட்சியில் ஒலி-ஒளி விளம்பரங் கள் போன்ற பன்முக அணுகுமுறையில் காட்சிக்கு வரக்கூடியவர்களை நோக்கி விளம்பரங்களை அமைக்க.
செய்தியாளர்களை அழைத்துப் புத்தகக் காட்சி பற்றிய செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்க. குழு எடுக்கும் முடிவுக ளுள் முக்கியமானவற்றை அறிக்கையாக்கிச் செய்தியாளரிடம் வாரந் தோறும் வழங்குக.
காட்சி நடக்கும் நாள்களில் அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களின் செய்தியாளரும், படப் பிடிப்பாளரும் காட்சியின் முக்கிய நிகழ்ச்சி களைக் குறித்துக் கொள்ளுமாறு பார்க்க.
படப்பிடிப்பாளர் ஒருவர் முக்கிய நிகழ்ச்சிகளை படம் எடுக்குமாறும், வெளி யூர்களிலிருந்து வந்து காட்சிக் கூடங்களை அமைத்தவர்களைப் படங்களில் பதிவு செய்யுமாறும் பார்த்துக் கொள்வதுடன் அப்படங்களின் ஒவ்வொரு படி செய்தியாளர்களையும், படங்களில் உள்ளவர்களையும் சென்றடையுமாறு பார்த்துக் கொள்க.
7. நிகழ்ச்சிகள்:
புகழ் பெற்றவர்களையும் வசதி படைத்தவர்களையும் நாள்தொறும் அழைத்துக் காட்சியைத் திறப்பதும், மாலை நிகழ்ச்சிகளுக்கு முன்னிலையாக்குவதும், மக்களைக் கவரும்.
மாலைகளில் மாணவர்கள் பலர் பங்களிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் பங்களிக்கும் மாணவர்களு டைய உறவினர், சுற்றத்தினர், நண்பர் யாவரும் கலை நிகழ்ச் சிக்காக வருவர். இவர்கள் புத்தகக் காட்சிக்கும், காட்சிக் கூடத்துக்கும் செல்வராதலால் விற்பனை பெருகும்.
8. பார்வையாளர் கூட்டம்:
காட்சி நடக்கும் நாளொன்றுக்கு ஆகக் குறைந்தது இரண்டாயிரம் பார்வையாளர் களாவது வரவேண்டும்.
பள்ளி முதல்வர்களுடன் பேசி, பள்ளி மாணவர்கள் அனைவரும் வியாழனும், வெள்ளியும் காட்சிக்கு வந்துபோகுமாறு அமைக்க.
அலுவலகங்களில் பணிபுரிவோர் சனி, ஞாயிறும், வணிகர்கள் ஞாயிறன்றும் காட்சிக்கு வந்துபோகுமாறு பார்த்துக் கொள்க.
பார்வையாளர் போதுமான நிதி ஆதாரங் களுடன் வந்தாலே புத்தகங்கள் விற்பனை யாகும். பள்ளி முதல்வரிடமும், ஆசிரி யரிடமும், மாணவரிடமும் இச் செய்தி போகுமாறு பார்த்துக்கொள்க.
9. அமைப்புக் குழு:
ஆகக் குறைந்தது ஐந்துபேர் கொண்ட குழு இப்புத்தகக் காட்சியை நடத்தலாம். இக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையைப் பகுத்தெடுத்துச் செய்வதுடன் திட்டமிடலிலும், நெறிப்படுத் துதலிலும் ஒருவொருவருக்கொருவர் உதவியாக இருப்பர்.
காட்சி தொடங்க, நாற்பத்தைந்து நாள்கள் இருக்கையிலேயே, இக்குழு தன் பணிகளைத் தொடங்க வேண்டும்.
1. இடம்,
2. அலங்காரம் - விளம்பரம்,
3. சுத்தம் - பாதுகாப்பு,
4. நிகழ்ச்சியமைப்பு,
5. பொது ஆட்சி
ஆகிய ஐந்து துறைகளையும் ஐந்து பேரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இடத்துக்குப் பொறுப்பானவர், இடத் தைத் தெரிவு செய்து, கண்காட்சிக்குத் தேவையான அனைத்துத் தன்மைகளும், அடிப்படை வசதிகளும், அடுக்குகளும் அங்கு உள்ளதை உறுதி செய்து, உரிய அனுமதிகள் பெற்று, இடம் திருப்பிக் கொடுக்கும் வரை பொறுப்பாக இருப்பர்.
அலங்காரம்-விளம்பரத்திற்குப் பொறுப்பானவர், முகப்பு அலங்காரம், புத்தக அடுக்கு - அழகு, கூடங்களில் போது மான அளவு வெளிச்சம், ஓடைகள் அகலம் போன்ற அனைத்துக்கும் பொறுப்பாக இருப்பதோடு, பள்ளிகள், வணிக நிறுவ னங்கள், அரசு நிறுவனங்கள், உயர்கல்வி நிலையங்கள் மற்றும் சமூகக் கூடங்களில் உள்ளவர் யாவரும் புத்தகக் கண்காட்சி நிகழ்வுப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அளவிற்கு விளம்பரமும், செய்தியாளர்களை அடிக்கடிக் கூட்டி அறிவித்தலும் செய்வர்.
சுத்தம்-பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருப்பவர் முகப்பு, கூடங்கள், திறந்த வெளிகள், வண்டி நிறுத்தும் இடங்கள், கழிவறைகள், முகப்புக்கு எதிராக உள்ள தெருவோரங்கள் யாவும் எப்பொழுதும் சுத்தமாக இருக்குமாறு ஒழுங்குகள் செய்வதுடன், புத்தகக் காட்சித் தொடக்கத் துக்கு முதல் நாளிலிருந்து முடிவுக்கு மறுநாள் வரை களவு, தீ, மின்கசிவு, நீர்க்கசிவு, மழை ஒழுக்கு, கழிவு நீர் வருகை முதலியவற்றிலிருந்து காட்சி வளாகத் திலுள்ள அனைத்துக்கும் பாதுகாப்புக் கொடுப்பதற்காகக் காவல் துறை, தீயணைப் புத்துறை, மின்சார சபை, காப்புறுதி நிறுவனம், வளாகக் காவலர், வளாக மின்சாரி போன்ற யாவருடனும் தொடர்பாக இருந்து புத்தகக் காட்சிக்குப் பாதுகாப்பை வழங்குவர்.
நிகழ்ச்சியமைப்புக்குப் பொறுப்பாக இருப்பவர், காட்சித் தொடக்கநாள் நிகழ்ச்சிகள், நாள்தோறும் மாலையில் பள்ளி மாணவர்களைக் கொண்டு நடத்தும் கலை நிகழ்ச்சிகள், வினாவிடைப் போட்டி, மழலையர்க்கான ஓவியப் போட்டி, புதிய புத்தக வெளியீட்டு விழா, நிறைவு விழா போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக் குமான கலைக் குழுக்களை யும், ஆள்களையும், புகழ் பெற்றவர்களையும் பட்டியலிட்டு, குழுவின் ஒப்புதலுடன் அவர்களைத் தொடர்பு கொண்டு, நிகழ்ச்சிகள் உரிய நேரத்தில் தொய்வின்றி நடைபெறுமாறும், உரிய செய்திகள் விளம்பரப் பொறுப்பாள ருக்கு முன்கூட்டியேப் போய்ச்சேருமாறும், நிகழ்ச்சிக்கான ஒலி-ஒளி-மேடை அமைப்புகள் செம்மை யாக இருக்குமாறும் பார்த்துக் கொள்வர்.
பொது ஆட்சியராகப் பொறுப்பேற்பவர் - பதிப்பாளர்களை அழைத்தலையும், அவர்களுக்கு உரிய கூடங்களை ஒதுக்குதலையும், அனைத்து அலுவலகப் பணிகளையும், கணக்கு வழக்குகளையும், கடிதத் தொடர்புகளையும் பார்த்துக் கொள்வதுடன் காசு, வங்கி, செலவைத் திட்டமிடுதல், செலவைக் கட்டுக்குள் வைத்திருத்தல், வருவாயை ஈட்டுதல், ஏனைய நான்கு துறையினரையும் தொடர்பு கொண்டு இணைத்தல் போன்ற பணிகளுக்குப் பொறுப்பாக இருப்பர்.
10. முடிவுரை:
மேலே கூறியவை பொதுக் கருத்து களே. அந்தந்த இடத்துக்கும் சூழலுக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு சிறிய அளவில் தமிழ்நூல் புத்தகக் காட்சியை அமைக்க.
தமிழ்நூல் விற்பனையைப் பெருக்கு வதற்கான பல வழிகளுள் புத்தகக் காட்சி யும் ஒன்று. அண்மைக் காலங்களில் புத்தகக் காட்சிகளை நோக்கிப் பெருந் தொகையில் கூடும் ஆர்வலருக்குத் தீனி தேவை. எழுக.